தவெக ஆட்சியாளர்களின் ஆடம்பரமும்... சாமானியனின் அவலமும்!
எம்.எல்.ஏக்களுக்கு புதிதாக கார்கள் வாங்கித் தரப்படலாம் என்ற செய்தியைப் பார்த்ததும் மனதில் இரண்டு விதமான யோசனைகள் வந்தன.
மக்கள் பிரதிநிதிகளுக்குப் பயண வசதி தேவைதான். தொகுதிக்குச் செல்ல வேண்டும், அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும், நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். அதில் தவறு இல்லை.
ஆனால் இதோடு நிறுத்திவிட்டால் எப்படி அதிகாரத்துக்கேற்ற வசதியும், வசதிக்கேற்ற ஆடம்பரமும் வேண்டாமா?
எம்.எல்.ஏக்களுக்கே கார் என்றால், அமைச்சர்களுக்கு என்ன குறைச்சல் பாவம், சென்னை டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு அவர்களது நேரம் வீணாகிவிட்டால் மாநில நிர்வாகம் எப்படிச் சீராக நடக்கும் அதனால் அமைச்சர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கித் தருவதுதான் முறையான நிர்வாகம்.
தலைவர்கள் வானத்தில் பறந்தால்தானே மாநில வளர்ச்சியும் உயரத்தில் இருக்கிறது என்று மக்களுக்குப் புரியும்!
சரி, அமைச்சர்கள் ஹெலிகாப்டரில் பறக்கும்போது, முதலமைச்சர் மட்டும் சாதாரணமாக காரிலா செல்ல வேண்டும் அவர் மாநிலத்தின் முதலமைச்சர். அவருக்கென்று அரசாங்கச் செலவில் ஒரு தனி விமானம் வாங்கிக் கொடுத்தால் என்ன குறை.
இதற்கெல்லாம் காசு எங்கே என்று மட்டும் யாரும் கேள்வி கேட்கக் கூடாது.
மக்களுக்கு நிவாரணம் வேண்டும் என்றால் கஜானா காலி. விவசாயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வேண்டும் என்றால் நிதி நெருக்கடி. அரசு மருத்துவமனைகளுக்கு வசதி வேண்டும் என்றால் ஒதுக்கீடு இல்லை. பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வேண்டும் என்றால் கணக்குப் புத்தகம் திறக்கப்படும்.
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் வசதி என்றால் மட்டும், கடன் வாங்கியாவது செய்யலாம். உலக வங்கியோ, வேறு யாரோ இருக்கிறார்கள் அல்லவா எப்படியாவது வாங்கிவிடலாம்.
அப்போதுதானே முந்தைய அரசை விட நாம்தான் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறோம் என்று கணக்கு காட்ட முடியும்?
ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள்.
முதல்வர் விமானத்தில் பறக்க வேண்டும். அவரைச் சுற்றி அமைச்சர்கள் ஹெலிகாப்டர்களில் வர வேண்டும். கீழே அதே சாலையில் எம்.எல்.ஏக்களின் கார்கள் அணிவகுத்துச் செல்ல வேண்டும். பாதுகாப்பு வாகனங்கள், சைரன் சத்தம், போக்குவரத்து நிறுத்தம் படத்தில் வரும் அரசியல் காட்சி போல எல்லாம் இருக்க வேண்டும்.
அந்த நேரத்தில் சாலையோரம் மக்கள் நிற்பார்கள். சிலர் வேலைக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருப்பார்கள். சிலர் ஆம்புலன்ஸ் போக வழி கிடைக்குமா என்று பார்ப்பார்கள். சிலர் மழை வந்தால் மீண்டும் அந்தச் சாலை உடையுமோ என்று நினைப்பார்கள்.
ஆனால் மேலே பறக்கும் விமானத்தையும், கீழே செல்லும் கார் அணிவகுப்பையும் பார்த்து அவர்கள் பெருமைப்பட வேண்டும். ஏனெனில் அதுதானே வளர்ச்சி என்று சொல்லப்படும்.
மக்கள் பிரதிநிதிகளுக்குப் பயண வசதி இருக்க வேண்டும். பாதுகாப்பு தேவையெனில் அது வழங்கப்பட வேண்டும். அரசு நிர்வாகம் திறம்பட இயங்குவதற்கான வசதிகளில் யாருக்கும் எதிர்ப்பு இல்லை.
ஆனால் ஒரு எளிய கேள்வி இருக்கிறது. மக்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், அதிகாரத்தில் இருப்பவர்களின் வசதி மட்டும் ஏன் முதன்மையாகிறது?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல், புதிய கார், புதிய ஹெலிகாப்டர், புதிய விமானம் என்று பட்டியல் நீளலாம்.
மேலே விமானம் பறக்கலாம். கீழே கார்கள் ஓடலாம்.
ஆனால் மக்கள் இன்னும் பேருந்து நிறுத்தத்தில்தான் நிற்கிறார்கள்.
ரயிலில் பயணித்தது ஒரு பெட்டி அல்ல ஒரு மனித உயிரின் கடைசி சாட்சி!
https://avargal-unmaigal.blogspot.com/2026/08/tamilnaduexpresschennaicentral.html
ஒரு சிவப்புப் பெட்டி எழுப்பும் பாதுகாப்புக் கேள்விகள்
—ன்புடன்
மதுரைத்தமிழன்


0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.