Sunday, April 14, 2013





தவறுகள் செய்கிறாரா தளபதி ஸ்டாலின்???


வாத்தியார் பிள்ளை  மக்கு என்று சொல்லுபவர்கள் அரசியல்தலைவரின் பிள்ளையை என்ன சொல்லி அழைக்கலாம் என்று எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க மக்களே.

தலைவராக  இருந்து கட்சியை கட்டிக் காத்துவருவது என்பது மிக எளிதல்ல. அதற்கு சாணக்கியதனம் வேண்டும்  அதை பெற்ற ஒரு சிலரில் கலைஞரும் ஒருவர். அந்த சாணக்கியதனம் இல்லாததால்தான்  வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் மற்றும் பலரும் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர் அந்த வரிசையில் வந்து கொண்டிருப்பவரில் ஸ்டாலினும் ஒருவரா?


தலைவரின் மகனாக இருப்பதானல் மட்டும் தலைமை பதவியை அடைந்து கட்சியை தன் கட்டுபாட்டுக்குள் வைத்துவிட அது ஒரு வணிக நிறுவனம் அல்ல. அதனால் சிந்தித்து நீண்டகால வியூகம் அமைக்காவிட்டால் கட்சி இருக்கும், அதன் தலைவராக ஸ்டாலின் இருக்கலாம். ஆனால் கட்சி தொண்டர்கள் இல்லாத காங்கிரஸ் மாதிரி ஆகிவிடும்.


தனது குடும்பத்தில் உள்ளவர்களை கட்டுகோப்பாக அணைத்து செல்ல முடியாதவர் எப்படி பல எண்ணங்களை கருத்துகளை கொண்டுள்ள தன் கட்சி தலைவர்களை எப்படி அணைத்து செல்ல முடியும் என்ற கேள்வி இங்கு வருகிறது. ஸ்டாலின் தன் குடும்பத்தில் உள்ளவர்களை முக்கியமாக அழகிரி மற்றும் கனிமொழியை அணைத்து செல்ல முயற்சிக்க வேண்டும். தான் தலைவராக வந்தால் அழகிரி மற்றும் கனிமொழிக்கு கட்சியில் முக்கியதுவம் வாய்ந்த பொறுப்புள்ள பதவிகளை கொடுக்க முயற்சிக்க வேண்டும் அவர்களை மனதார நம்பவும் வேண்டும் அப்படி செய்யாமல் அவர்களுக்கு பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கொடுத்தால் தன்னையும் மிஞ்சி விடுவார்கள் என்று நினைத்து அவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தால் அதே அவநம்பிக்கை உங்கள் மீது அவர்களுக்கும் வரும். எங்களை நம்பாத உன்னை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் உன்னுடைய வெற்றிக்கு நாங்கள் ஏன் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வருவதில் ஒன்றும் தப்பு இல்லையே (மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்,  அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலேயே )

ஆனால் ஸ்டாலின் செய்வது என்ன?

தனது அண்ணன் குடும்பத்தினர் பல பிரச்சனைகளில் சிக்கி இருக்கும் போது இதுதான் சமயம் அவரை அமுக்கிவிடலாம் என்றும் அதுபோல தன் தங்கை பொதுக் கூட்டத்தில் பேசினால் அங்கு தனக்கு இருக்கும் செல்வாக்கு குறைந்துவிடுமோ என்று அது நடக்கவிடாமல் தடுப்பதும் போன்ற  நடவடிக்கையில் இறங்கி தனது கட்சி ஆட்களையே தமக்கு எதிரி ஆக்கி கொண்டிருக்கும் தவறை செய்து கொண்டிருக்கிறார்.


அதுமட்டுமல்லாமல் திமுகவில் தெரிந்தோ தெரியாமலோ வந்த குஷ்பு அந்த கட்சியில் ஸ்டாராக  வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரையும் அனைத்து கொண்டு செல்லாமல் அவர் எங்கே தனக்கு மேலே வந்துவிடுவாரோ என்று பயந்து அவர் சொன்ன கருத்துக்காக அவர் வீட்டை தனது ஆதரவாளர்கள் மூலம் தாக்கி பயமுறுத்த செய்வது அவருக்கு பலத்தை அல்ல பலவீனத்தையே கொடுக்கிறது, ஸ்டாலினின் இந்த செயலால் குஷ்பூவின் பலம் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை.

இப்படியே தவறுக்கு மேல் தவறாக செய்துவந்தால் கலைஞர் இருக்கும் வரை அவருக்கு மதிப்பு கொடுத்து இருக்கும் தலைவர்கள் அவரது மறைவுக்கு பின்னர் ஸ்டாலினுக்கு பரம எதிரியாகவே ஆகிவிடுவார்கள் 

.
பிரபல பத்திரிக்கையில் வந்து இருக்கும் செய்தியில் ஒரு சிறுபகுதி இங்கு பெட்டிச் செய்தியாக

அடுத்த வாரிசின் ஆதரவுக்காக இதுநாள் வரை தனக்கு இழைக்கப்பட்ட அவமானங்களை எல்லாம் சகித்துக் கொண்டிருந்த பெண் வாரிசு, வெகுண்டு எழுந்திருப்பதாகக் கேள்வி. தனது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த சாதாரணப் பொதுக் கூட்டத்தைக் கூட அடுத்த வாரிசு ரத்து செய்ய வைத்ததில் கடுங்கோபம் கொண்ட பெண் வாரிசு, மூத்த வாரிசிடம் அடைக்கலம் தேடியிருக்கிறாராம். எந்தக் காரணத்தைக் கொண்டும், அடுத்த வாரிசைத் தலைவராக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இருவரும், அதற்கான திட்டங்களைத் தீட்டுவதில் முனைப்புடன் இறங்கி இருக்கிறார்களாம். அடுத்த வாரிசால் உதாசீனப்படுத்தப்படும் மூத்த தலைவர்கள் பலர் இவர்களுக்கு மறைமுகமாக தூபம் போடுவதாகக் கூறப்படுகிறதே,





அழகிரிக்கு தகுந்த பொறுப்பு கொடுக்கவில்லையென்றால் அது வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர் ஒலிக்கும். 2001ம் ஆண்டு சட்டசபை  தேர்தலில் திமுக தலைமையோடு மோதிக் கொண்டிருந்த அழகிரி தமக்கும் செல்வாக்கு இருக்கு என்பதைக் காண்பிப்பதற்காக திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிரான போட்டி வேட்பாளர்களை நிறுத்தி கலகமூட்டினார். அவர் நினைத்தபடியே மறைந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் உள்ளிட்ட சில மூத்த தலைவர்களும் தோற்றுப் போயினர். இந்த தடவை அதை அவர் காங்கிரஸின் மறைமுக ஆதரவோடு செய்வார். அதிமுகவும் இந்த சந்தர்ப்பதை மிகவும் நன்றாக பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு உண்டு. கனிமொழியும் ஒரங்கட்டபடுவேரானால் அவரும் அண்ணன் பக்கம் சாய அதிகம் வாய்ப்புகள் உண்டு. அழகிரியை சில குறைத்து மதிப்பிடலாம். ஆனால் அவரிடம்தான் கலைஞரின் உண்மையான வாரிசுக்கான குணம் உண்டு என்பதை காலம் உணர்த்தலாம் . நிறைய பேர் நினைக்கலாம் அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் அவரை விட்டு இப்போ ஸ்டானின் பக்கம் போய்க் கொண்டிருப்பதாக பலரும் நினைக்கலாம் உண்மை அதுவல்ல கலைஞரின் தந்திர குணத்தை கொண்ட அழகிரி பண்ணும் தந்திர வியூகம்தான் அது. தனது ஆட்களை எதிரியின் கூடாரத்திற்குள் வைக்கும் அமெரிக்கர்களின் செயலே அது...


அடுத்தாக திமுகவில் ஸ்டாராக வலம் வரும் குஷ்பு. அவரது வளர்ச்சியை அடக்க நினைத்தால் அதுவும் மிக தவறாகவே முடியும். வருங்கால அரசியலில் அவரின் பங்கும் கணிசமாக இருக்கும்.( எனது கணிப்பின் படி அவர் வருங்கால மத்திய அமைச்சராக வர வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது ) ஸ்டாலின்  வரும் தேர்தலில் அவருக்கு எம்.பி பதவிக்கான சீட்டு கொடுக்காமல் ஒதுக்கினால் அவருக்கு அதிமுகவில் சீட்டு கொடுக்கப்பட்டு ஸ்டாலினுக்கு எதிராக மிக கடுமையாக பிரச்சாரம் செய்யவாய்ப்புகள் மிக அதிகம் .நாஞ்சில் சம்பத்துகே அதிமுகவில் இடம் கிடைக்கும் போது குஷ்புவுக்கு மிக எளிதாக கிடைக்கும்


இப்படி தன்னை சுற்றி வரும் பிரச்சனைகளில் இருந்து ஸ்டாலின் மீள ஒரே வழிதான் உள்ளது அதுதான் தன் கட்சியில் இருக்கும் தான் எதிரியாக நினைப்பவர்களுக்கும் நல்ல பதவிகளை தந்து அவர்களை அரவனைத்து சென்றும் தனது நட்புகளுக்கு கலைஞர் மாதிரி நெஞ்சத்தில் இடத்தையும் தந்துதான் சமாளிக்க வேண்டும் அது அவரால் முடியுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.


.

 அன்புடன்
மதுரைத்தமிழன்



0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.