Wednesday, October 14, 2015



avargal unmaigal
Photo Courtesy : Kasthuri Rengan

வலைப்பதிவர் விழாவில் எழுந்த சலசலப்பும் அதை மூடி மறைத்த விழாக் குழுவினரும்

புதுக்கோட்டையில் நடந்த பதிவர்விழா பற்றி பலரும் பதிவுகள் எழுதி கொண்டிருக்கிறார்கள் நாம் போகவில்லையானாலும் அதை பற்றி நாம் ஒரு பதிவாவது எழுதாவிட்டால் இந்த பதிவர் சமுகம் நம்மை ஒதுக்கி வைத்துவிடும் என்பதால் நானும்  அங்கு நடந்த  நிகழ்வை ஒரு பதிவாக எழுதிவிடுகிறேன்


விழா நடக்கும் மண்டபத்தின் நுழை வாயிலில் மைதிலி நின்று  அங்கு வருபவர்களை வரவேற்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த என்னை பார்த்து வாங்க வாங்க  என்று அழைத்தார்.

உடனே நான் என்னங்க அதுதான் நான் வந்துட்டேனே அப்புறமும் நீங்க வாங்க வாங்க என அழைக்கின்றீர்கள் என்றேன்.

அதை கேட்ட மைதிலி ஙே.....என்று முழித்துவிட்டு சகா எப்படி இருக்கீங்க என்று கேட்டார்

உடனே நான் இது என்ன கேள்வி...நீங்கதான் என்னை பார்த்து கொண்டிருக்கிறீங்க நீங்கதான் நான் எப்படி இருக்கிறேனு சொல்லனும் அதைவிட்டு விட்டு என்னிடம் கேட்டா எப்படி? நான் சூர்யா மாதிரி இருக்கிறேன்னா சொல்ல முடியும்.

அதை கேட்ட மைதிலி ஙே.....என்று முழித்துவிட்டு  சகா நான் கேட்க வந்ததை நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க. சரி உங்க உடம்பு எப்படி இருக்கு என்றார்.

என்னம்மா நீ என்னையேவே மிரட்டுற........


சகா உங்களுக்கு என்னாச்சு நான் கேட்பதை எல்லாம் தப்பா புரிஞ்சுகிறீங்க. இப்ப சொல்லுங்க உங்க உடல் நிலை எப்படி இருக்குது?

என்னம்மா நான் என்ன டாக்டருக்கா படிச்சு இருக்கேன் உடல் நிலை பற்றி என்னிடம் கேட்குறே... சரி எனக்கு உடல்நிலை சரியில்லைன்னு சொன்னா இந்த விழாவை அப்படியே விட்டு என்னை டாக்டரிடம் அழைத்து போகப் போறீயா என்று கேட்டதும்..

உடனே மைதிலி மண்டபத்தின் உள்ள பார்த்தாவாறு என்னங்க மது நீங்க என்னை கூப்பிட்டீங்களா என்று சத்தம் போட்டு கேட்க அதற்கு அவரும் நான் ஒன்றும் உன்னை கூப்பிடவில்லை என்று சத்தமாக பதில் சொல்ல...இல்லங்க நீங்க என்னை கூப்பிட்டது என் காதில் நன்றாக விழுந்துச்சு என்று சொல்லி... உடனே  சகா உங்க மாப்பிள்ளையை பாருங்க என்னை கூப்பிட்டு விட்டு இப்ப வெட்கத்தில் அப்படி இல்லைன்னு சொல்லுறாறு..... நான் போய் அவருக்கு என்ன வேண்டும் என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி பறந்துவிட்டார்.

அவர் சென்றதும் அங்கு வந்த பாலகணேஷ் நண்பா எப்படி கிறே நன்னா இருக்கியப்பா? குழந்தை குட்டியெல்லாம் நல்ல கீதாப்பா என்றார். நண்பா குழந்தை நன்றாக இருக்குதுப்பா ஆமாம் குட்டின்னு கேட்டியே அது யாரப்பா என்று குழப்பத்தோட கேட்டேன். அதற்கு பால கணேஷ் அதுதாம்பா நீ வளர்க்கிறீயே அந்த நாய்க்குட்டியை கேட்டேனாப்பா என்றார். அதை கேட்டதும்தான் என் நெஞ்சில் பாலை வார்த்தது போல இருந்திச்சு.( அப்புறம் என்னங்க நாம இன்பாக்ஸ்ல டாவு அடிக்கிற குட்டியை பற்றிதான் எப்படியோ கண்டுபிடிச்சிட்டாருன்ணு கொஞ்சம் நேரம் பயந்துட்டேன்) இதையெல்லாம் வெளியே காட்டிக்காம எங்க உங்களை சுற்றி இருக்கும் பட்டாளத்தை காணலியே என்றேன். உடனே அவர் ஆவி மண்டபத்தின் உள்ளே இருக்கு என்றார். என்னங்க நான் ஒன்று கேட்டா நீங்க ஒன்று பதில் சொல்லுறீங்க. ஆமாம் இந்த விழாவிற்கு பதிவர்கள் மட்டும்தானே வரணும் என்று சொல்லி இருந்தாங்க இப்ப ஆவி எல்லாம் வந்திருக்கிறதுறீங்க ஆமாம் இது பதிவர் மாநாடா அல்லது ஆவிங்க மாநாடா என்றேன்.

யோவ் மதுர நீ நல்லா கிண்டல் பண்ணுறே என்று சொல்லியவாறே என் முதுகில் ஒங்கி அடிக்க வந்தார். அவர்கிட்ட அடிவாங்குன்னா நம்ம உடம்பு தாங்குமான்னு உடனே குனிஞ்ச போது அந்த அடி அங்கு வந்த சீனு மேல் விழுந்தது. அடி வாங்கிய சீனு அலறியவாரே வாத்தியாரே என்னை ஏதுக்கய்யா அடிச்சிரு என்றான்.அதற்கு பாலகணேஷ் சீனு நான் உன்னை அடிக்கவில்லை அந்த பாவிபய மதுரையை அடிக்காத்தான் கையை ஒங்கினேன் அது உன்மேல பட்டுடுச்சுப்பா என்றார்.

வாத்தியாரே சும்மா கதையெல்லாம் அளக்காதீங்க நீங்க ஒரு குறும்படத்தில் நடிச்ச உடனே மனதில் ஹீரோவா நினைச்சுகிட்டு இந்த சைனிங் ஸ்டார் மேலே பொறாமைபடுறீங்க என்று சண்டை போட ஆரம்பித்தார்.. இதற்கு மேல் அங்கு இருந்தால் இரண்டும் பேரும் நம்ம மண்டையை உடைத்துவிடுவார்கள் எண்ணி அங்கிருந்து நகர ஆரம்பித்தேன்.

அப்போது அங்கு கேமிராவும் கையுமாக வந்த துளசி சார் என்னை பார்த்து ஹாய் மதுரை தமிழா என்று சொல்லிவிட்டு என்னை அப்படியே நகராமல் இருக்க செய்து என்னை போட்டோ எடுத்தார் அதன் பின் இப்படி கையை தூக்குங்க அப்படி நில்லுங்க இப்படி சிரீங்க என்று சொல்லியவாறே போட்டோ எடுத்துவிட்டு மதுர உங்க முகம் மிக அருமையாக வந்திருக்கிறது அதனால நீங்கதான் நான் எடுக்கும் அடுத்த படத்திற்கு ஹீரோ என்றார். அதை கேட்ட நான் உடனே துளசியை பார்த்து நான்  நீங்க சொல்லுறதுக்கு ஒரு ஒகே ஆனால் நான் ஹீரோவா நடிக்கிறதுக்கு ஒரு கண்டிஷன் இருக்குது அது வந்து எனக்கு ஹீரோயினா நயன் தாராவைமட்டும்தான் போடனும் இல்லைன்னா என் கால்சீட்டு கிடைக்காது என்றேன் அதை கேட்ட அவர் கீதா நீ என்னை கூப்பிட்டியா என்று சொல்லி துண்டைக்காணும் துணியை காணும் என்று ஒடினார்

அவர் சென்றதும் தமிழ் ஆசிரியர்கள் வாழ்க வாழ்க என்று பலமாக கோஷமிட்டேன். அதை கேட்டவாறு அங்கு வந்த முரளி என்ன மதுர சத்தம் பலமாக கேட்குதே என்ன விஷயம் என்றார். ஒண்ணுமில்ல முரளி நம்ம முத்துநிலவன் இந்த பக்கமா போனார் அதனாலதான் இப்படி ஒரு கோஷம் போட்டேன். மனுசர் காதில்பட்டா நமக்கு ஒரு விருதாவது தருவாரே என்று சொல்லி சிரித்தேன். இப்படி சிரித்தாவறு சற்றே தலை நிமர்ந்த போது அங்கு வரும் பழனியப்பன் கந்தசாமியை கண்டதும்  முரளி அவர் கண்ணில் நான் பட்டால் செத்தேன் அதனால நாம  கொஞ்சம் வெளியே போவோம் என்றேன்

அவரைக்கண்டதும் உங்களுக்கு ஏன் இந்த பயம் என்றார் இல்லைங்க முரளி அவரின் அனுமதிகேட்காமல் அவரின் புகைப்படத்தை எனது பதிவில் இட்டுவிட்டேன் அதனால் அவர் என் மீது வழக்கு போடுவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார் என்றதும் அவரை நன்றாக பார்த்துவிட்டு முரளி சொன்னார் மதுர அவர் ஒற்றக் காலில் அல்ல இரண்டு காலிலும்தான் நிற்கிறார் என்று நேரம் காலம் புரியாமல் ஜோக்கு அடித்தார்..

அட எங்க ஊர்காரர் வந்திருக்கிறாரா என்று சத்தம் கேட்டு திரும்பி பார்த்ததும் அங்கே திண்டுக்கல் தனபாலன் புன்னகைத்தபடி நின்று இருந்தார். அதை பார்த்த முரளி தனபாலன் மாதிரி உதவி செய்ய யாராலும் முடியாது என்றார். அதை கேட்ட தனபாலன் மிக அடக்கமாக இருந்தார். சரி நம்ம ஊர்காரரை மட்டும் கலாய்க்காமல் இருந்தால் நன்றாக இருக்காதே என்று நினைத்து தனபாலன் நீங்கள் எல்லோருக்கும் உதவி செய்யுறீங்க ஆனால் எனக்கு மட்டும் செய்யல. எனக்கு உங்களால் ஒரு உதவி வேண்டும் செய்ய முடியுமா என்று கேட்டேன் அவரும் சந்தோஷத்தில் என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்  நீங்க கேட்டு நான் மாட்டேன் என்று சொல்லுவேனா என்றார்.

நான் உடனே உங்கள் லேப்டாப் வேணுமே எனக்கு என்றேன். அதனால என்ன இதோ தருகிறேன் என்று சொல்லி கொடுத்துவிட்டு நீங்க மெயில் எல்லாம் செக் பண்ணிட்டு ஒரு மணி நேரத்தில் திருப்பி கொடுத்திருங்க என்றார். தனபாலன் என்ன சொல்லுறீங்க நான் உங்க லேப்டாப்பை கேட்டது எனக்கே எனக்கு என்று சொல்லியதுதான் தாமதம் யோவ் மதுர நீ உன் சேட்டையை என்னிடம் காண்பித்து என் பொழைப்பையே கெடுத்துவிடுவ போலிருக்கு என்று சொல்லி லேப்டாப்பை புடுங்கி கொண்டு ஒட ஆரம்பித்தார்.

அவர் ஒடுவதை பார்த்து கொண்டே வந்த ரமணி சார் என்ன மதுர அவரிடம் என்ன சொன்னீங்க ஏன் அவர் இந்த ஓட்டம் ஒடுகிறார் என்று கேட்டவாரே நம் பக்கத்தில் வந்து அமர்ந்தார். அவரிடம் சிறிது நலம் விசாரித்துவிட்டு சார் உங்களிடம் ஒரு கேள்வி என்றேன். நீங்க லையன்ஸ் கிளப் தலைவர்தானே என்றேன் அதற்கு ஆமாம் என்றார் உங்களுக்கு தமிழ் என்றால் ரொம்ப பிடிக்குமா என்றேன் அதற்கும் ஆமாம் என்று சொன்னார். அப்ப ஏன் உங்க லையன்ஸ் கிளப்பை சிங்க குழு என்று மாற்றக் கூடாது அதுதானே நியாயம் என்றதும் அவரும் அங்கிருந்து மறைந்து போனார்.

அந்த சமயத்தில் மியாவ் மியாவ் என்று சத்தம் கேட்டது அதை கேட்ட முரளி மதுர ஏதோ ஒரு பூனை இங்கே நுழைந்துவிட்டது போல அதை பார்த்து விரட்டிவிட்டு வருகிறேன் இல்லையென்றால் உணவு கூடத்திற்குள் புகுந்து நாசமாக்கிவிடும் என்றார். அதை கேட்ட நான் சொன்னேன் அது பூனை அல்ல பூனை போல பேசும் நம்ம தென்றல் சசி என்று சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தார்.

அப்போது மேடையில் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது விழா தொடங்க ஆரம்பிப்பதால் பதிவர்கள் அனைவரும் உள்ளே வந்து இருக்கையில் அமரும் மாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்றதும் பதிவர்கள் அனைவரும் என்னை நோக்கி வந்தனர். நானும் ஆஹா நம்மை சிறப்பு வரவேற்பு கொடுத்து கூப்பிட போகிறார்கள் என நினைத்த மறு நிமிடத்தில் என்னை நன்றாக அடித்து விழா முடியும் வரை இவரை ஒரு ரூமில் போட்டு அடைத்து வைப்போம் இல்லையென்றால் விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினரையும் இப்படி கலாய்த்து கெடுத்துவிடுவார் என்று என்னை ரூமில அடைத்துவிட்டு சென்றனர்


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : தமிழன் என்று பெயர் வைத்தாலே அல்லது சொன்னாலே உலகம் முழுவதும் ஏன் அடிக்கிறார்கள் என்பது உங்களுக்கு இப்போது நங்கு புரியும். நமக்கு வாயாலதான் பிரச்சனைங்க

27 comments:

  1. எப்படியோ எல்லோரையும் கலாய்ச்சிட்டீங்க.... உண்மையாய் நடந்த மாதிரி உணர்வு வந்தது.. ஏனெனில் இவர்களனைவரையும் அங்கு சந்தித்தேனே....

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்லுறதை பார்த்தா இது என்னவோ கட்டுக்கதை மாதிரியல்லவா இருக்கு...இது எல்லாம் உண்மையாகவே நடந்தது. நீங்க விழா ஆரம்பிச்சதற்கு அப்புறம் வந்ததால் இது உங்களுக்கு தெரியாமல் போயிடுச்சு....அதுவும் இல்லாமல் என்னை அடிச்சு துவைச்சு ஒரு ரூமிற்குள் அடைத்துவைத்து விட்டு விழாக குழுவினர் அமைதியாக இருந்துவிட்டனர்

      Delete
  2. Replies
    1. எனது நிலமையை எண்ணி வருத்தப்பட்டு கண்டணம் செய்வீர்கள் என்று எதிர்பார்த்தால் நீங்கள் மிக சந்தோஷமாக நன்றி என்று சொல்லிட்டு போயிட்டீங்களே?

      Delete
  3. நல்ல வேலை யாரும் விழா மண்டபத்தைவிட்டு ஓடவில்லை..இப்படியா செய்வீங்க சகோ :)

    ReplyDelete
    Replies
    1. நான் மண்டபத்திற்குள் இருந்திருந்தால் நிச்சயம் எல்லோரும் ஓடி இருப்பாங்க...ஆனா அட்லாண்டாவில் இருந்து ஒரு பெண்தான் புதுக்கோட்டையில் நடந்த நிலவரைத்தை தனது தோழி மூலம் அறிந்து இப்படி என்னை அடித்து உதைத்து விழா முடியும் வரை ரூமில் போட்டு அடைக்க ஐடியா கொடுத்ததாம் என்று தகவல் அவரதுபெயரின் முதல் எழுத்து 'கி' என்றும் இடையில் உள்ள எழுத்து 'ரே' என்றும் கடைசி எழுத்து 'ஸ்' என்றும் முடியும் என்ற ரகசியத்தகவல் எனக்கு கிடைத்து இருக்கிறது

      Delete
  4. நேரில் பார்த்தது போல் வருணிக்கும் உங்கள் எழுத்துக்கு ஒரு சலாம்! - இராய செல்லப்பா

    ReplyDelete
    Replies
    1. என்னது என் எழுத்துக்கு சலாம் அதுவும் பெரிய அனுபவஸ்த எழுத்தாளரிடம் இருந்தா... இது எனக்கு கிடைத்த சாகித்திய அவார்ட் மாதிரியல்லவா இருக்கிறது.கவலைப்படாதீங்க இந்த அவார்டை நான் திருப்பி எல்லாம் கொடுக்க மாட்டேன்

      Delete
  5. உங்களை ரூமில் போட்டு அடைத்த பின்பு வந்ததால் நான் தப்பித்தேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் மிகவும் ஸ்மார்ட்டான ஆள் என்பது உங்களை நேரில் சந்தித்த போதே தெரிந்தது. அப்படி நீங்கள் ஸ்மார்ட்டாக இருப்பதால் நீங்கள் சிறிதுதாமதமாக வந்து தப்பித்து கொண்டீர்கள்

      Delete
    2. அவருடைய ஸ்மாட்டின் ரகசியம் சுவையான உணவு வகைகளை அவரே தயாரித்தது உண்பதிலிருந்து, மதுரை தமிழரே, நீங்களும் நாங்களும் அவசியம் பாடம் படித்து கொள்ள வேண்டும்.

      Delete
  6. ஷகிலா (அய்யோ மறதியால மாத்தி அடிச்சுட்டனே..!)
    தமிழனுக்கு மறதிதானே சிறப்பு
    அகில உலக மறதித்தமிழர்கள்
    சார்பாக

    தங்களுக்கு
    அண்டப்புளுகன்
    என்ற பட்டத்தை
    தரத் தவறிய
    புதுக்கோட்டைக்காரர்களுக்கு
    என் கண்டணங்கள்..

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் தராவிட்டால் என்ன நீங்கள் தந்துவீட்டது சந்தோஷம்தான் பட்டத்தோடு பணமுடிப்பும் தருவதுதான் நம்ம தமிழர்கள் பழக்கம் அதனால் பணமுடிப்பை சிரமம்பாராமல் அனுப்பிவைக்கவும்

      Delete
  7. Replies
    1. ரசித்து மகிழ்நதற்கு நன்றி... விழாவிற்கு நீங்கள் வாராததால் தப்பித்துவிட்டீர்கள் இந்த தடவை

      Delete
  8. நல்லவேளை ஒரு கேள்வியிலேயே
    நான் தப்பித்தேன்
    மிகப் பெரும் நடிகர்கள் அரசியல்வாதிகள்
    எல்லாம் தங்கள் கலாய்ப்பில் மாட்டி
    முழிபிதுங்குகையில் நாங்கள் எம்மாத்திரம் ?
    சுவாரஸ்யமான கலாய்ப்பு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies

    1. நிறைய கேள்விகள் கேட்கலாம் என்றுதான் நினைத்து இருந்தேன் ஆனால் ஒரே கேள்வியில் நீங்கள் மாயமாகி வீட்டீர்களே

      Delete
  9. அருமையான கலாய்ப்பு))))))))

    ReplyDelete
  10. மதுரைத்தமிழர்(கள்) வாழ்க வாழ்க! என்னமாவது தலைப்பை வச்சி என்னென்னமோ எழுதி எப்படியாவது எல்லாரையும் படிக்க வச்சிடுறீங்க தலைவரே! நடத்துங்க.. ஆமா எங்க மைதிலி அப்படியெல்லாம் “ஙே“முழி முழிக்கிற ஆள் கிடையாது. உங்களைக் கேட்குற கேள்வியில் நீங்கதான் ஙே ஆவீங்க தெரியுமில்ல.. யாருன்னு நினைச்சீங்க.. கற்பனையில கூட இத ஒத்துக்க முடியாது தமிழா! சரி வராமலே ஒரு பதிவு போட்டு வந்தவங்களையும் படிக்க வச்சதுக்கு நன்றி . நல்லாயிருங்கய்யா...!

    ReplyDelete
    Replies
    1. கவிதை கட்டுரை கதை என்று அழகாக எழுத தெரிந்தால் இப்படியெல்லாம் பதிவு எழுத தேவையிருக்காது ஆனால் அதெல்லாம் தெரியாததால் இப்படிதான் எழுதி என் பொழுதை போக்க வேண்டி இருக்கிறது. மைதிலி ஙே என்று முழிக்கிற ஆள் கிடையாது என்றாலும் இந்த பதிவின் படி பல இடத்தில் அவர் ஙே என்று முழித்துதான் இருக்கிறார் ஹீஹீஹீ

      ஒரு வேளை அவங்க கேட்குற கேள்வியில் நான் ஙே என்று சிறிது முழித்தாலும் அதன் பின் நாங்க கொடுக்குற பதிலால் அவங்க ஙே..ஙே என்று முழிப்பாங்க

      நான் வரவில்லையா.... நான் வந்து விழா பார்த்து கலாய்த்து கலாய்த்து கருத்துகள் இட்டது இணையத்தில் இப்ப உலா வருகிறதாம்.விழாவிற்கு வந்த எனக்கு சாப்பாட்டிற்கு ஏற்பாடு பண்ணாததால் சாப்பிடும் நேரத்த்தில் நான் போய்விட்டேன்

      Delete
  11. நான் வெண்புறாவாக வந்தேனே.... ஆனால் அங்கே உங்களைக் காணவில்லையே....!!!

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவால் ஏற்பட்ட ஒரே நன்மை, உங்களை வலையுலகில் மறுபடியும் காணமுடிந்ததுதான், அருணா! :)

      Delete
  12. நான் தான் பேசவேயில்லையே பிறகெப்படி பூனை போல பேசுவதாக சொன்னீங்க.இப்போ தெரிகிறது நீங்க வரவேயில்லை என்று.

    ReplyDelete
  13. அடடா.....நானெல்லாம் தூசுங்க........இன்னும் அள்ளிவீசுங்க.....

    ReplyDelete
  14. "கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/bloggersmeet2015.html

    நன்றி...

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.