Wednesday, April 1, 2026

 சினிமா மோகம்... தொகுதிக்கே சாபம்! - விஜய்க்கு ஓட்டுப்போடுவது தற்கொலைக்குச் சமமா? #UnfilteredPolitics

      



தமிழக அரசியல் களம் இப்போது ஒரு மெகா பட்ஜெட் படத்தின் கிளைமாக்ஸ் போல பரபரப்பாகிக் கிடக்கிறது. ஒரு பக்கம் திராவிட மாடல் என்று முழங்கும் திமுக, இன்னொரு பக்கம் மீண்டும் வருவோம் என எகிறும் அதிமுக. இந்த இரண்டு யானைகளின் சண்டைக்கு நடுவே, 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் புதுவரவு... அதுவும் சினிமா கிளாப்ஸ் சத்தத்தோடு எண்ட்ரி கொடுத்திருக்கிறது.

ஆனால், கள எதார்த்தம் என்ன?  பெரம்பூர்  திருச்சி வாக்காளப் பெருமக்களே, கொஞ்சம் கவனிங்க! விஜய் நிற்கும் தொகுதிகளில் அவருக்கு ஓட்டுப் போடுவது என்பது, அடிப்படையில் ஒரு எமோஷனல் முடிவாக இருக்கலாம். ஆனால், அரசியல் என்பது உணர்ச்சியால் ஆளப்படுவதல்ல; அது உரிமையால் ஆளப்படுவது. விஜய் ஆட்சியில் அமரப்போவது இல்லை என்பது சூரியன் கிழக்கில் உதிப்பதைப் போல நிச்சயம். அவர் மட்டும் ஒரு தொகுதியில் ஜெயிப்பதால் சட்டசபையில் ஒரு கூடுதல் இருக்கை கிடைக்குமே தவிர, அந்தத் தொகுதிக்கு ஒரு 'விடிவு' கிடைக்காது. தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதற்குச் சமம் இது!

அரசியல் என்பது வெறும் டைலாக் பேசுவது அல்ல; மக்கள் துயரத்தில் தோள் கொடுப்பது. 41 உயிர்கள்  பறிபோனபோது, ஒரு ஆறுதல் சொல்லக்கூட நேரில் வராத ஒரு தலைவர  தன்னை நம்பி பெரும் முதலீடு செய்து எடுத்த படமான ஜனநாயகம் சென்சர் போர்ட்டால் அனுமதி கிடைக்காதற்கு எதிர்த்து  ஒரு குரல் கொடுக்காத தலைவரா நாளை உங்கள் வீட்டுச் சாக்கடைப் பிரச்சனைக்கோ, தண்ணீர் தட்டுப்பாட்டுக்கோ ஓடோடி வருவார் என்று எதிர்பார்ப்பது சர்க்கார் படத்தின் கற்பனைக் காட்சிக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம்; நிஜ வாழ்க்கைக்கு அல்ல!

நடைமுறை அரசியலின் கசப்பான உண்மை ஒன்று உண்டு. ஆட்சியில் அமரப்போவது என்னவோ திமுகதான்  ஒருவேளை உங்கள் தொகுதியில் விஜய்யை ஜெயிக்க வைத்தால், ஆளும் அரசு அந்தத் தொகுதியைத் திரும்பிப் பார்க்கக் கூட விரும்பாது. வளர்ச்சித் திட்டங்கள் முடங்கும், நிதி ஒதுக்கீடு குறையும். இறுதியில் பாதிக்கப்படப் போவது அந்தத் தொகுதி மக்களாகிய நீங்கள்தான்!

திமுக பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்கிறீர்களா? அரசியல் என்பது ஒரு சாய்ஸ். உங்களுக்கு ஆளுங்கட்சி மேல் அதிருப்தி இருந்தால், அதை முறையாக வெளிப்படுத்தப் பல வழிகள் உண்டு. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவிற்காவது உங்கள் வாக்கைச் செலுத்துங்கள். குறைந்தபட்சம் அவர்கள் ஆட்சியில் இருந்த அனுபவம் கொண்டவர்கள், வேலைகளை எப்படி வாங்க வேண்டும் என்று தெரிந்தவர்கள். 

வாக்கு என்பது உங்கள் வலிமை. அதை ஒரு சினிமா பிம்பத்திற்காகத் தாரை வார்த்துவிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 'தொகுதிப் பக்கம் ஆளக் காணோம்' என்று புலம்புவதில் அர்த்தமில்லை.  அதனால் யோசிங்க உங்கள் வோட்டை யாருக்கு போடுகிறீர்கள் என்பதை சிந்தித்து போடுங்கள்

சில நாட்களுக்கு முன்னால் என் பேஸ்புக் தளத்தில் பகிர்ந்தது இது

#விஜய் களம் இறங்கும் தொகுதி மக்களுக்கு  சில வார்த்தைகள்

தளபதியின் விசில் சின்னத்தில் 
நீ குத்தும் முத்திரை...
உன் தலையில் நீயே 
வாரிப் போட்டுக் கொள்ளும் 
சுடுகாட்டு மண்!

#நிச்சயமற்ற_சிம்மாசனம்

அவர் அமரப் போவது 
அரியணை அல்ல...
ஆலமரத்து நிழல் கூட அல்ல!
அவர் மட்டும் வென்று 
என்ன பயன்?
ஒற்றைச் செங்கல் 
கோட்டை ஆகுமா?

#மௌன_சாட்சி

நாற்பத்தொன்று பிணங்கள் 
வரிசையாய் கிடந்தபோது 
வராத கால்கள்...
உன் தெருச் சாக்கடைக்காகவா 
நடந்து வரப்போகின்றன?
துயரம் ஒரு 'டேக்' (Take) அல்ல...
அது நிஜம்!

#புறக்கணிக்கப்பட்ட_பூமி

ஆட்சிக் கட்டில் 
அயலான்(திமுக) கையில்...
வெற்றிப் பதக்கம் 
இவர் கையில்!
ஆளும் அரசு 
உன் பக்கம் திரும்பாது...
தாகத்தில் இருக்கும் தொகுதிக்கு 
ஒரு துளி நீரும் எட்டாது!

#தேர்வு_உன்னுடையது

விடியல் பிடிக்கவில்லையா?
விட்டுவிடு...
ஆனால், இருட்டில் 
விளையாடாதே!
அதிமுகவிற்காவது போடு...
அழியப்போகும் வாக்கை 
அறிவோடு போடு!

அன்புடன்
மதுரைத்தமிழன்(Deej Durai)

  • #TamilNaduElection2026 #TNElection2026 #தமிழகதேர்தல்2026 #PoliticsTN தமிழ்நாடுஅரசியல் #MaduraiTamilan #AvargalUnmaigal #PoliticalAnalysis #UnfilteredPolitics

  • Next
    This is the most recent post.
    Previous
    Older Post

    0 comments:

    Post a Comment

    நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.