Saturday, September 23, 2023

 வன்முறை பள்ளிகளில்  அல்ல   நம்  வீடுகளில்தான்  கற்று கொடுக்கப்படுகிறது 

avargal unmaigal



தமிழகத்தில் வன்முறை பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை , நமது வீடுகளில்தான் கற்பிக்கப்படுகிறது . குழந்தைகளின் நடத்தையை வடிவமைப்பதில் வீட்டுச் சூழலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சக்திவாய்ந்த வார்த்தைகள் இவை.   இது  உண்மை அதனால் இது கசக்கத்தான் செய்யும்.

நன்றாக யோசித்து  உற்று நோக்கிப் பார்த்தால் , பள்ளிகளில் எந்த ஆசிரியருக்கும் பாடங்களைத் தவிர வேறு ஏதும் சொல்லித் தருவதற்கு நேரமில்லை .அவர்கள் சொல்லித் தருவது எல்லாம் பாடங்களையும்  மற்றும் தேர்வுகளில் எப்படி அதிக மதிப்பெண் எடுப்பதற்கான வழி முறைகளையும்தான்.. அங்கு எப்படிக்   கற்பழிப்பது, வன்முறை செயல்களில் ஈடுபடுவது ,எப்படி கொலை செய்வது ,பாலியல் பலாத்காரம் செய்வது, எப்படி அடுத்தவர்களை ஏமாற்றுவது  என்றெல்லாம் சொல்லித் தருவதில்லை. ஆனால் இதையெல்லாம் இன்றைய சமுகத்தில்  ஆண்களும் பெண்களும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் . அதை எங்கே எப்படி கற்கிறார்கள். அவர்கள் மனதில் பொறாமை ,கயமைத்தனம் எல்லாம் எப்படி வந்தன என்று பார்த்தால், அது நமது வீடுகளில்தான் கற்ப்பிக்கபடுகின்றன்.

வீடுகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம்  பொய் சொல்லக் கூடாது என்று சொல்லித்தான் வளர்க்கிறார்கள்.. ஆனால் அப்படிச் சொல்லித் தரும் பெற்றோர்கள் பல விதங்களில் பல சமயங்களில் பொய் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் .அது குழந்தையின் மனதில் ஆழப்பதிகிறது .அது போலப் பெரியவர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லிதருகிறார்கள் .அப்படிச் சொல்லித் தரும் பெற்றோர்களே பல சமயங்களில் அவர்களின் வீடுகளில் இருக்கும் வயதான பெரியவர்களை மதிப்பதே இல்லை அதைப் பார்க்கும் குழந்தைகள் வேறு என்ன கற்றுக் கொள்வார்கள்.


 சாதிகள் இல்லையடி பாப்பா குலத்   
 தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

மேலவர் கீழவரென்றே வெறும்
வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியை எல்லாம் இன்று
பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்

சாதிப் பிரிவுகள் சொல்லி அதில்
தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிக் கொடுமைகள் வேண்டா அன்பு
தன்னில் செழித்திடும் வையம்.


இப்படி பள்ளிக் கூடங்களில் பாரதியார் பாடல்களைச் சொல்லித் தந்தால் , வீடுகளிலோ நாம் சாதியப் பெருமைகளைப் பேசி குழந்தைகளை வளர்க்கிறோம் . குழந்தைகளின் கையில் சாதியிக் கயிறுகளைக் கட்டி அனுப்புகிறோம். அதோடு விட்டுவிடுகிறோமா நாம் , வீடுகளில் சீரியல்களை  குழந்தைகள் படிக்கும் போதே ஓட விடுகிறோம்.. அதிலோ கணவன் ,மனைவி ,மாமனார், மாமியார்,  நாத்தனார் மற்றும் கள்ள உறவு , கொலைகள் ,கொடுமைகள் என்பதைத் தினம் பெரியவர்கள் பார்க்கிறார்கள் .அப்படிப் பார்க்கும் போது அருகில் படிக்கும் குழந்தைகளின் மனதில் அப்படியே படிகிறது .அதுவும் ஆழ்மனதில் படிகிறது .அதுமட்டுமல்ல வண்ணமயங்களில்  மனதைத் துண்டி இழுக்கும்   இசையுடன், அதீத சவுண்டுகளில் அது ஓடும் போது குழந்தகளை கவராமல் வேறு என்ன  செய்ய செய்யும்.

இதோடு விட்டுவிடுகிறோமா ,பெரிய நடிகர்களின் படங்களுக்குக் குழந்தைகளையும் கூட்டத்தோடு பார்க்கக் கூட்டிச் செல்கிறோம் .அதுவும் சமீபத்தில்  சூப்பர் ஸ்டார் நடித்த படத்தில் ஆரம்பமே மிக வன்முறையான காட்சியுடன் ஆரம்பிக்கிறது .அதுவும் மிகப் பெரிய ஸ்கீரினல் மிக அதிக சவுண்டுடன் அதைப் பார்க்கும் குழந்தைகளில் மனதில் அன்பா உண்டாகும்.( இப்படி சமுகத்தை கெடுக்கும் நடிகர்களைத்தான் தலையில் துக்கி வைத்து கொண்டாடுகிறோம்)


சமுக  நலன் கொண்டவர்கள் தலைவர்கள் என்று சொல்வார்கள் .அந்த தலைவர்களோ சமுக நலம் என்பதற்குப் பதிலாக தன் நலம் கருதிச் செயல்படுகிறார்கள் .அதை மக்கள் கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காக ,மனிதர்களிடையே  பக்தி என்ற பெயரில் மத துவேஷங்களைத் தூவி விட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் அடிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

இதை எல்லாம் பார்த்து வளரும் குழந்தைகள் மட்டும் காந்தி மாதிரி ,புத்தர் மாதிரி வளர்ந்துவிடும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம்.

வீட்டில் நடக்கும் வன்முறை எப்படி குழந்தைகளுக்கு வன்முறையாக இருக்கக் கற்றுக்கொடுக்கிறது என்று பார்த்தால் , குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் பெரியவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள். மோதலைத் தீர்க்க வன்முறையைப் பயன்படுத்துவதை அவர்கள் பெற்றோர்கள் அல்லது பிற உறவுகளைப் பார்த்தால், வன்முறை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தை என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.

மேலும் நாம் தவறு செய்யும் குழந்தைகளை உடல்ரீதியாகத் தண்டித்தால் அது  மற்றவர்களைக் கட்டுப்படுத்த வன்முறை ஒரு வழி என்பதாகத்தான் அதை  அவர்கள் புரிந்து கொள்கிறார்கள் . வன்முறை ,அதிகாரம் தான் தங்களுக்கு ஒரு  மரியாதையைக் கொடுக்கிறது என்பதை  அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

வீட்டில் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகள் தாங்களாகவே வன்முறையாளர்களாக ஆளாகும் அபாயம் அதிகம். அவர்கள் வன்முறையில் ஈடுபடுபவர்களாகவும் மாற வாய்ப்புள்ளது.

சமுகத்தில் நடக்கும் அவலங்கள் மாற வேண்டுமானால்; ஒவ்வொரு பெற்றோர்களும், சமுக தலைவர்களும்  ,திரைப்படங்களும் செய்தி ஊடகங்களும் மாற வேண்டும். இவை எல்லாம் மாறினால்தான் சமுகம் மாறும் .ஆனால் உண்மை என்னவென்றால் ,இதுவெல்லாம் மாறிவிடும் என்பதற்கான நம்பிக்கை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை என்பதுதான்.

அதனால் சமுகத்தில் பாலியல் பலாத்காரங்கள் நடை பெற்றுக் கொண்டும் ,முதியவர்கள் ,தங்கள் குழந்தைகளால் அலட்சியப்படுத்திக் கொண்டு இருப்பதும், வன்முறை மத துவேஷங்கள் வெறிகள் பலிகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கும். அதில் நாம் பாதிக்கப்படும் போது நாம் கண்ணீர்விட்டு அழுது கொண்டு ,தனிமையில் இருக்கத்தான் வேண்டும் .அப்படி நீங்கள் அழுவதை இந்த சமுகம் பார்த்துக் கொண்டு வெகு வேகமாக சுயநலமற்று  ஒடிக் கொண்டுதான் இருக்கும்


இறுதியாக, பெரியவர்கள் முன்மாதிரியாக இருப்பது முக்கியம். குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் பெரியவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள். மோதல்களை அமைதியாகவும் வன்முறையின்றியும் தீர்த்து வைப்பதன் மூலம் பெரியவர்கள் ஒரு நல்ல முன்மாதிரி வைக்க முடியும்.

நம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மற்றும் அன்பான வீடுகளை உருவாக்குவதன் மூலம்தான் வன்முறை சுழற்சியை உடைக்க முடியும்.

#வன்முறைக்கு முடிவு #பாதுகாப்பான வீடுகள் #மகிழ்ச்சியான குழந்தைகள்



அன்புடன்
மதுரைத்தமிழன்



1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.