Tuesday, September 20, 2016



படிக்க தவறவிடக் கூடாத இணையப்பதிவுகள்



இணையம் கடல் போன்றது அதில் தகவல்களோ குப்பைகள் போல குவிந்து கிடக்கின்றன. அதில் முத்துக்களை பார்ப்பது மிக அரிது. அதிலும் நல்ல தரமான முத்துக்களை எடுப்பது என்பது மிக கடினமே அதில் இருந்து நான் கண்டு எடுத்த விலையுயர்ந்த இரண்டு முத்துக்களை பற்றிய பதிவுதான் இது


ஒன்று  தந்தை (செல்வா) தன் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி எழுதிய மடல் பதிவு. சக்தி     இதை படித்த  Dr B Jambulingam என்பவர்  இட்ட கருத்து இது ."என்னைப் போல மகள் இல்லாத அப்பாக்கள் இப்பதிவினைப் பார்த்ததும் அதிகம் ஏங்குவார்கள் என நினைக்கிறேன். ஏதோ மனதில் எனக்கு ஒரு தாக்கத்தை உணர்ந்தேன். உணர்வுபூர்வமாக அதிகம் நெகிழ்ச்சியடைந்தேன்."

அதைபடித்த நான் சொன்னது இதுதான் "மகள் இருக்கும் அப்பாக்களும் ஏங்கத்தான் செய்வார் காரணம் உள்ளத்தில் உள்ளதை இப்படி அழகாக எடுத்து சொல்ல எல்லா அப்பாக்களினாலும் முடியாதே"


மற்றொரு பதிவு மூ.கீதா அவர்கள் எழுதிய மாதவம் செய்தவர்கள் என்ற பதிவு.. இதை படித்தவுடன் சுளீர் என்று நெஞ்சில் ஊசி குத்துவது போலத்தான் இருக்கிறது.

இந்த இரு பதிவுகளும் என் நெஞ்சில் நெகிழ்வை ஏற்படுத்தியவை,

கீதா மற்றும் செல்வா போன்றவர்களின் அருமையான சிந்தனைகள் பலரை சென்று அடையும் நோக்கத்தில் அது இங்கு பதியப்படுகிறது இதை எழுதிய இருவருக்கும் எனது நன்றிகள். அவர்களின் அனுமதி இன்றி இங்கு பதிந்து இருக்கிறேன். அவர்கள் இதற்கு ஆட்சேபணை சொல்லமாட்டார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது
 மாதவம் செய்தவர்கள்

படிக்கும் பருவத்தில் பள்ளியில்
பதற்றமாய் இருக்கும்
வழியின்றி அருவருப்பின் உச்சத்தில்
சென்று மீள்வோம்..

பணியிடத்தில் அதற்கென்று இடமே
பார்த்திராத பொழுது மறைவிடங்கள்
நாடுவோம்..

பயணத்தில் படக்கென்று இறங்கி போகமுடியாது
பரிதவித்து அடக்கியிருப்போம்...
அதற்காக உள்ளே எதுவும் இறக்காது
ஆற்றுப்படுத்துவோம்...வயிறை...

நகரங்கள் கிராமங்கள்
எல்லாமே மாறுதலின்றி
ஒரே நிலைதான்....என்ன

கிராமங்கள் மறைவிடம்
கொடுக்கும்...

காலங்கள் மாறவில்லை
முப்பது வருடங்களாகியும்
என் சந்ததியும் அலைகின்றனர்..
எப்போதும் வீட்டுக்குள் அவசரமாய்த்தான்
நுழைவோம்...

இப்போதும் கூட்டங்களுக்குச் செல்லுகையில்
இருக்குமாவென சந்தேகத்தோடு சென்று
இல்லாது அலைவோம்...

மாதவம் செய்து பிறந்த பெண்கள்
நாங்கள்...




சக்தி......
அன்பின் சக்திக்கு,

பிறந்தநாள் வாழ்த்துகள்.

நீ கருவிருந்த நாட்களில் பெயர் வைக்கப்பட்ட என் மற்றொரு உயிர்.

அரசு மருத்துவமனையின் அத்தனை கிறீச் என்ற அலறல்களின் ஊடே நான்  உன் குரல் அறிந்தேன்..
அது ஜென்மங்களின் தொடர்ச்சி அல்லவா?
துணிப்பொதியில் சுற்றிய சிவப்பு ரோஜாவாய் தாதி உன்னை தூக்கிவந்து முகம் காட்டிய அதிகாலை..வாழ்வின் விடியல்.

மடக்கிக்கிடந்த விரல்கள் நீவி என் சுண்டுவிரலை உள்வைக்கிறேன்.
இறுகப்பற்றிக்கொண்டாய் என்னையே..

கட்டிலறை தொட்டிலாட கவிதைகளில் நீ மலர்ந்தாய்..
அன்பென்னும் ஆதார சுருதி நீ..
மீட்டியதெல்லாம் மழலைப்பண்கள்.

சிறுகை வீசிய காற்றின் ஓசைகள் இசையாய்ப்போயின.

குப்புறப்படுத்து...
தவழ்ந்து,நின்று, நடந்தென என் வாழ்வின் வசந்தங்கள் உன்னோடு..

நீ வறியவனுக்குக் கிடைத்த வரம்.
உன் பிள்ளைப்பருவ நாட்களே என் கவலை கொன்ற களி நாட்கள்.

வாசிக்கத்தெரிந்த நீ யோசிக்கவும் ஆரம்பித்த அமிர்த வேளைகளில் நான் பிறவி கடந்துவிட்டேன்.

தோளுக்கு மேல் வளர்ந்து தோழியாகிவிட்டாய்...
உன் சொல்லுக்கு பயப்படும் நான் வளர்ப்புக்கோழியாய் கால் சுற்றுகிறேன்.
வாழ்க்கையும்,சமூகமும் ஆயிரம் கற்றுத்தரலாம் சக்தி...
ஒரு மகள் சொல்லும் சொற்களை விட யாதொன்றும் பெரிதாயில்லை.

கட்டங்களும்,பின்னங்களுமென உன் பொறியியற் பாடங்கள் எனக்குப்புரியாதிருக்கலாம்.
ஆயினும் உன் உயரங்கள் ரசிக்கிறேன்..
அ என்ற ஒற்றை எழுத்தை நீ என்ன பாடு படுத்தியிருக்கிறாய்..

செப்புகளில் சிறுவீடு கட்டி, கொப்புகள் உடைத்து மரமாக்கிய மழலைப்பருவம் மறந்து போயிருக்கலாம் உன் கணினிப்படிப்புகளில்.
என் இரவுகளின் வரம் அந்த நினைவுகள்.

அப்பாக்கள் சொல்லாத அன்பு அதிகம் மகளே!
ஆனால் அது தாய்ப்பாலினும் கலப்படம் இல்லாதது.

கண்களின் வழி இறங்கும் ஒரு சொட்டு ஆனந்தக்கண்ணீர் அணைகளில் அடங்காது..

உன் இறக்கைகள் அற்புதமானது..
உன் புகழைச்சுமந்து அகிலமெங்கும் பறக்கும் வல்லமை உடையது..

அண்டரண்டபட்ஷி என ஆகாயம் மறைத்துப் பற..
அன்பென்னும் உளி கொண்டு செதுக்கு இவ்வுலகை. அப்பன்,அம்மையென்ற கருவிகள் நாங்கள்..
உனக்கான பாதை நீயறி...

நதிகளும், அருவிகளும் பிறக்குமிடத்தில் இருந்துவிடக்கூடாது...
நீ காட்டாறு..
அணைகளுக்குள் அடங்காதே..
பின்னர் உன் வரலாறு வாசிக்கப்படும்போது என் பெயரும் இருப்பதன்றி..வேறென்ன என் பேறு?

என் இரண்டாம் தாயே..
எப்போதும் மகிழ்ந்து வாழ்..

அன்புடன்,
உன் அப்பா...

எழுதியவர் செல்வா




21 comments:

  1. Replies
    1. உங்களுக்குதான் நான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கனும். நன்றிகள் தோழி

      Delete
  2. Madurai Thamizhan sir, unmaiyileye Arumaiyana rasigar neengal. Arpudhamana padhivugalil muthaana irandu padhivugalai therndheduthu azhaguku azhagu serthu irukireergal. Indha irandu kavidhaigalum ovvoru konathil makkalai kavarbavai. Adhilum kurippaga Kavignar Meera.Selvakumar ayyavin varigal kanneerai thulirrka seidhadhu. Ungal padhivil muthaayypaga Thiru.Jumbulingam avargalin pinnootathai veliyitu palar nenjangalin Ulla piradhipalippai Veli paduthi irukireergal. Arumai. Thodarndhu saga-ezhuthalargalin padhivugalai veliyitu engalukum kalippai thaarungal endru thangalai vendi kolgiren. Vazhthukkal sir.

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலத்தில் இப்படி டைப்பண்ணுவது மிக கடினம் அதைவிட அதை படிப்பது மிகவும் கடினம். இருந்த போதிலும் கருத்தை எப்பாடியாவது சொல்லிட வேண்டும் என்ற உங்கள் முயற்சியை பாராட்டுக்கிறேன். கீதா செல்வா அவர்களின் வலைத்தளத்திற்கான லிங்கை இங்கு இணைத்து உள்ளேன் நேரம் கிடைத்தால் அங்கு சென்று அவர்களை பாராட்டி சில வார்த்தைகள் பதியவும் இது அவர்களுக்கு மிக உற்சாகத்தையும் மேலும் நல்ல பதிவுகளை எழுத ஊக்கமும் தரும்.. உங்கள் கருத்திற்கு நன்றிகள் நண்பரே

      Delete
    2. உங்களுக்கு புண்ணியமா போட்டும். அவங்க என்ன எழுத்துனாங்க என்பதை இரத்தின சுருக்கமா மொழிபெயருங்க.. ப்ளீஸ்,

      Delete
  3. அற்புதமான பதிவுகள்
    இதற்குமுன் படிக்கவில்லை
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் படித்து மகிழ்ந்த பதிவுகள் நாலுபேரை சென்று அடையனும் என்று இங்கு பகிரிந்து இருக்கிறேன். சில சமயங்களில் நாம் அவர்களை தொடர்ந்தாலும் நாம் மிஸ் பண்ணிவிட சான்ஸ் இருப்பதால் இப்படி அறிமுகம் செய்தால் தவற வாய்ப்புக்கள் இல்லை

      Delete
  4. நானும் படித்தேன் ஐயா.உணர்ச்சிகளை ஒரே இடத்தில் கொட்டி சென்றுள்ளனர் இருவரும்.நானும் செல்வா ஐயாவின் மடலை படித்த உடன் நினைத்தேன் அவருக்கு தனது மகளின் மீது எவ்வளவு பிரியம் வைத்துள்ளார் என்று.அருமை ஐயா.மீண்டும் படித்து இரசிக்கவும் பொறாமை அடைய செய்தமைக்கும் நன்றிகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வைசாலி உங்களின் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் மிக நன்றி. உங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள் மீண்டும் எனது தளத்தில் கருத்து இடும்போது ஐயா என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டு எழுதுங்கள் நன்றி

      Delete
  5. உண்மையில் முதலில் உங்களின் ரசனையைப் பாராட்டவேண்டும். உயர்ந்த ரசனை உள்ளவர்க்குத்தான் இது பிடிபடும். இரண்டாவது, உங்களின் பரந்த பண்பை நினைத்து மகிழ்கிறேன். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்” எனும் பண்பு! மூன்றாவது அதை வெளிப்படையாகச் சொல்ல ஒரு நல்ல மனம் வேண்டும். நான்காவது அவர்கள் இருவருமே எங்கள் புதுக்கோட்டை மற்றும் நம் கணினித் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் என்பதில் எங்களுக்கும் ரொம்ப மகிழ்ச்சி. “சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்” என்பார்கள். உங்களின் இதுபோலும் இணைப்புத் தந்ததில்தான் என் வலைப்பக்கத்தை ஆயிரக்கணக்கானோர் முதலில் வருகை தந்தனர் (இதை முன்பே சொல்லியிருக்கிறேன்) அவர்களின் வளர்ச்சிக்கு உங்களின் இந்த “ஊக்க இணைப்பு” உதவும் என்பதால் நன்றி நன்றி. உங்களின் பணிகள் தொடர வாழ்த்துகள் தமிழரே! வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. முத்துநிலவன் நான் எதையும் ப்ளான் பண்ணி எழுதுவதும் இல்லை அறிமுகப்படுத்துவதும் இல்லை எல்லாம் அன்றைய மனநிலையில் என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறேன் அவ்வளவுதான்,நீங்கள் எல்லாம் செயலில் செய்வதில் நூற்றில் ஒரு பங்கு கூட நான் செய்வதில்லை....பாராட்டுவதென்றால் நீங்கள் செய்யும் காரியங்களைத்தான் நாள் முழுவது பாராட்டிக் கொண்டிருக்க வேண்டும்

      Delete
  6. அருமையான பதிவுகளை பற்றிய பதிவு. உங்கள ரசனைக்கு வாழ்த்துக்கள். இருந்தாலும்.. இவ்வளவு எழுதியும் நம் பதிவு எதுவும் தங்களின் அங்கீகாரத்தை பெற வில்லையே என்ற ஏக்கம் வந்ததை மறைக்கவோ மறுக்கவோ இயலவில்லை.

    தொடர்ந்து முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நான் எதையும் ப்ளான் பண்ணி எழுதுவதும் இல்லை அறிமுகப்படுத்துவதும் இல்லை எல்லாம் அன்றைய மனநிலையில் என்ன தோன்றுகிறதோ அதை செய்கிறேன் அவ்வளவுதான் உங்களின் பல பதிவுகளை ரசித்து தனிப்பட்ட முறையில் உங்களிடம் பாராட்டி சொல்லி இருக்கிறேன் அடுத்தாக நான் அறிமுகப்படுத்திதான் நீங்கள் வெளியுலககிற்கு தெரிய் வேண்டும்மென்பதில்லை நீங்கள் மிக பாப்புலர் ஆளாகத்தான் இருக்கின்றீர்கள். சொல்லப்போனால் நீங்கள் என்னைதான் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய நிலையில்தான் இருக்கின்றீர்கள் உங்களை பாராட்டாதவர்கள் இந்த வலையுலகில் உண்டோ?

      Delete
    2. ஐயா.. சும்மா உங்களை போட்டு பார்த்தேன்.

      Delete
    3. போட்டு பார்க்கின்றீர்களா இருங்கள் இருங்கள் ஒரு வாரம் உங்களுக்கு சிக்கனையும் மீனையும் கட் பண்ண சொல்லுகிறேன் அதுக்கு அப்புறம் எப்படி போட்டு பார்கீன்றீர்கள் என்று பார்ப்போம்

      Delete
  7. புதுகை நண்பர்களின் இரு பதிவுகளும் உங்கள் தளத்தில் கண்டு மகிழ்ச்சி. நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.....

    ReplyDelete
  8. அருமையான பதிவுகள்( கவிதைகள்)இரண்டை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி! கீதா அவர்களின் வலைப்பூவை தொடர்கிறேன்! செல்வா அவர்கள் பதிவுக்கு சென்று பார்க்கிறேன்! இந்த அரிய பணியினை தொடர்க! நன்றி!

    ReplyDelete
  9. தெரிவு செய்து பகிர்ந்த விதம் அருமை. "என்னைப்போல......." என்ற எனது கருத்திற்கான உங்களது மறுமொழியை முழுமையாக ஏற்கிறேன்.

    ReplyDelete
  10. நல்ல பகிர்வுகள்...
    இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்தும் நன்றியும்...

    ReplyDelete
  11. கீதா அவர்களின் கவிதையையும்,செல்வாவின் அற்புதமான பதிவை சுட்டிக் காட்டி இருப்பதன் மூலம் எவ்வளவுதான் நீங்கள் சிரிக்க சிறக்க நகைச்சுவை படைத்தாலும் மட்டுமல்ல மென்மையான உணர்வுகளுக்கு சொந்தக்காரர் என்பதையும் அவ்வப்போது வெளிப்படுத்துகிறீர்கள். உங்கள் வெற்றியே வெளிப்படைத் தன்மைதான்

    ReplyDelete
  12. மிக மிக அருமையான இரு பதிவுகள்! இங்குச் சுட்டி எங்களுக்கு அறிய தந்தமைக்கு மிக்க நன்றி மதுரைத் தமிழன். பொதுவாக நாங்கள் மின் அஞ்சல் வழி அந்த ஸ்ப்ஸ்க்ரிப்ஷன் வைத்திருப்பவர்கள் தளத்தில் பதிந்திருப்பதால் எங்கள் பெட்டிக்கு வந்துவிடும் இருவரது பதிவுங்களும் எங்கள் மின் அஞ்சலுக்கு வந்துவிடும் இது எப்படியோ மிஸ் ஆகியிருக்கிறது...கீதா அவர்களின் பதிவிற்குப் பதில் இட்டுவிட்டோம். செல்வா அவர்களின் பதிவு மிஸ் ஆகிவிட்டது. உங்கள் லிங்க் போனால் அங்கு செல்வாவா அவர்களின் பதிவு இல்லை....தமிழா...

    இங்கு செல்வாவின் பதிவும் வாசித்துவிட்டோம்..அருமை.பகிர்வுக்கு மிக்க நன்றி. இப்படி அருமையான பதிவுகளைப் பாராட்டி எழுதும் உங்களுக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.