Sunday, December 13, 2015


avargal unmaigal



சத்தமில்லாமல் கடினமாக உழைத்தால் வெற்றியின் சத்தம் உலகமெங்கும் கேட்கும் என்று சொல்வதற்கிணங்க சத்தமில்லாமல் நிசப்தம் என்ற ஒரு அறக்கட்டளையை துவங்கி கடினமாக உழைக்கும் ஒரு இளைஞர்தான் வா.மணிகண்டன் http://www.nisaptham.com



வெற்றி எல்லோரையும் தேடி வராது ஆனால் மணிகண்டனை தேடி வருகிறது. காரணம் அவரிடம் நேர்மையும் உழைப்பும் சுயநலம் இல்லாமல் இருப்பதுதான்.





வலைப்பக்கத்திலும் பேஸ்புக்கிலும் தனது எண்ணங்களை பதிந்துவந்தவரிடம் உதவிகள் கேட்டு கஷ்டப்பட்டவர்கள் இவரை அணுகிய போது இவர் தன்னிடம் இருக்கும் பணத்தை கொண்டும் நண்பர்களிடம் நன்கொடையாக வாங்கியும் உதவி வந்து இருக்கிறார். ஒரு சில சமயங்களில் ஒருவருக்கு உதவ நண்பர்களிடம் கோரிக்கை வைத்த போது தேவைக்கும் அதிகமாக பணம் கிடைத்தும் இருக்கிறது. அந்த பணத்தை வைத்து கஷ்டப்படுபவர்களை கண்டறிந்து மணிகண்டனே உதவிசெய்து வந்து இருக்கிறார். அப்போது அவர் மனதில் உதித்ததுதான் நிசப்தம் அறக்கட்டளை. அறக்கட்டளை தொடங்குவது என்பது படித்த அவருக்கு ஒரு பெரிய காரியமில்லை. ஆனால் அதை எவ்வாறு செயல்படுத்த போகிறோம் என்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருந்தது. அதனால் அவர் சற்று தயங்கி கொண்டிருந்தார்.



ஆனால் இப்படி தயங்கிக் கொண்டேயிருந்தால் ஒரு நல்ல காரியமும் செய்ய முடியாது. செய்து பார்த்துவிடலாம். நாம் செய்கிற காரியம் சரியானவர்களை அடைகிறது என்கிற நம்பிக்கை வந்துவிட்டால் திருப்தி தானாகக் கிடைத்துவிடும். சேரும் பணத்தில் ஒரு ரூபாய் கூட வீணாகப் போய்விடாது என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் என்று நினைத்து துணிந்து ஆரம்பித்துவிட்டார்.



அதுமட்டுமல்லாமல் தனது அறக்கட்டளையின் கணக்கு வழக்குகளை மிக திறந்த புத்தகமாக இணைய வெளியில் மிகவும் வெளிப்படையாக தனது வலைப்பக்கத்தில் வாரம் தோறும் அறிவித்து வந்தார் & வருகிறார்



கல்வி என்றில்லை... முடிந்த வரை சகல நிகழ்வுகளிலும் நிசப்தம் அறக்கட்டளை மூலம் பங்கேற்கிறார். தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்கிறார். பாதிக்கப்பட்டவர்களுடன் கைகோர்த்து செயல்படுகிறார்..




இந்த அவரின் வெளிபடையான அவரின் போக்கு இணையத்தில் அவருக்கு ஒரு பெறும் மதிப்பை பெற்று கொடுத்தது. இதோ இப்போது கூட சென்னை - கடலூரில் மாநில அரசின் அலட்சியம் - கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் அறக்கட்டளை மூலம் உதவுகிறார். சென்னையில் ஏற்பட்ட வெள்ளை நிவாரணதிற்கு அவர் உதவ நினைத்து அறிவிப்பு வெளியிட்ட போது முப்பது லட்சத்திற்கு அதிகமாக நன்கொடை அவரின் அறக்கட்டளைக்கு கிடைத்து அதை மிக பயனுள்ள வழியில் நண்பர்களின் உதவிகளோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவருகிறார்.



இந்த கால இளைஞர்கள் மிக மோசம். அவர்கள் சினிமா மோகம் கொண்டு வாழ்க்கையை பயனுள்ள வகையில் செலவழிப்பதில்லை என்ற பொதுவான குற்றசாட்டு உண்டு அது மட்டுமல்லாமல் சமுக நிகழ்வுகளில் அவர்களுக்கு அக்கறை ஏதும் இருப்பதில்லை என்ற குற்றசாட்டும் பரவலாக வைக்கப்படுகிறது.



ஆனால் இதையெல்லாம் இவர் உடைத்து ஏறிந்து இந்த கால இளைஞர்களுக்கு மிகவும் முன்னுதாரணமாக இருக்கிறார். இவர் மட்டுமல்ல இவரை போல பல இளைஞர்களும் சத்தமில்லாமல் தங்கள் பங்கை இந்த சமுதாயத்திற்கு ஆற்றிவருகிறார்கள் அதை இந்த சென்னையின் வெள்ளக்காலங்களில் மிக நன்றாகவே அறிந்து கொள்ள முடிகிறது



நடிகர்களின் கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் நடக்கும் சமுகத்தில்தான் இப்படிபட்ட நல்ல இளைஞர்களின் முயற்சியால் சமுக நலப்பணியும் நடந்து வருகிறது.



இப்படி ஒரு நல்ல இளைஞரின் முயற்சியால் முப்பது லட்சத்திற்கும் அதிகமாக பணம் திரட்டி நண்பர்களின் உதவிகளுடன் இவரால் பாதிக்கப்பட்ட சமுகத்திற்கு நல்லது செய்ய முடிகிறது என்றால். அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் இயக்கங்களும் தங்களுக்கு பின்னால் இருக்கும் பெரும் கூட்டத்தின் உதவியால் பெரும் பங்கை மக்களுக்கு ஆற்றமுடியும் என்றாலும் அதை செய்யக் கூட மனம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பது மிக வேதனையைத்தான் தருகிறது. உதாரணமாக ரஜினி கமல் போன்ற மிகப் பெரிய நடிகர்கள் இலட்சக்கணக்கில் நன்கொடை கொடுக்க தேவையில்லை அதற்கு பதிலாக தங்களின் மன்ற ரசிகர்களை கொண்டு களத்தில் இறங்கி வேலை செய்து இருந்தாலே சென்னை பழைய நிலைக்கு மிக எளிதாக திரும்ப்பி இருக்கும். பலம் இருக்கும் அவர்களிடம் மனிதநேயம் அறவே இல்லாமல் இருக்கிறது..



அவர்களிடம் இல்லாவிட்டால் என்ன மணிகண்டன் போன்றவர்களிடம் இருக்கிறதே அதுமட்டும் போதும் இந்த சமுகம் தழைத்து நிற்க.....


avargal unmaigal

மனமார்ந்த வாழ்த்துகள் மணிகண்டன் உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.



டிஸ்கி: நண்பர்களே கெட்ட செய்திகளை வைரலாக பரவவிடும் நாம் இந்த இளைஞரைப்பற்றியும் சமுக தளங்களில் அதிகமாக பகிர்ந்து இவர் செயலை பாராட்டி பெருமை படுத்தலாமே. உங்களால் முடியுமா?
 

அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments:

  1. அருமையானதோர் மனிதர் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி மதுரைத் தமிழா....

    ReplyDelete
  2. இப்போது கடலூரில் சேவை தொடர்கிறது...

    ReplyDelete
  3. மதுரைத்தமிழா அருமையான மனிதர் ஒருவரைப் பற்றிய பதிவு! அவர் சேவை இப்போது கடலூரில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது கடலூருக்கும் சென்னைக்கும் உதவ வேண்டி பதிவுகள் போட்டு வேலூரிலிருந்து யாரேனும் நல்ல உள்ளம் ஒருவர் தொடர்பு கொண்டால் பொருட்கள் என்ன வேண்டும் என்ற தேவையை அறிந்து சொன்னால் உதவியாக இருக்கும் என்ற போது வேலூர் அன்பேசிவம் அவரைத் தொடர்பு கொண்டு பின்னர் சிவம் எங்களைத் தொடர்பு கொண்டு சென்னையில், விசு கீதாவை அழைத்த போது கீதா மணிகண்டன் பற்றிச் சொல்ல விசு மணிகண்டனைத் தொடர்பு கொண்டு என்று என்ன தேவை என்பது வரைச் சொல்லி....இப்படிப் போனது. மணிகண்டன் அதற்கு அடுத்தவாரம் சென்னை வருவதாகவும் இருந்தது. அன்றைய தேதியில் எட்டு லட்சம் கிடைத்திருந்தது. நாங்கள் மணிகண்டனை அவரது வலைத்தளத்தில் தொடர்பவர்கள். நாங்கள் தமிழ்க்குடில் (பரிவை சே குமார் அவரது தளத்தில் சொல்லிய போது) சேவை செய்ய திரண்ட போது அவர்களுக்கும் சொன்னோம் மணிகண்டனும் களத்தில் இருக்கின்றார். எல்லோரும் ஒரே இடத்தில் ஒரேவிதமாகச் செய்யாம்ல் கலந்து தொடர்பு கொண்டுசெய்தால் உதவிகள் எல்லோரையும் சென்றடையும் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.

    அருமையான இளைஞர். மிக அழகாக எழுதக் கூடியவர். "பத்தி" எழுதலில் கைதேர்ந்தவர்.

    நாங்கள் அவருக்குப் பின்னூட்டம் எப்போதேனும் இட்டாலும் தொடர்பவர்கள்.

    மிக்க நன்றி தமிழா இவரைப் பற்றிச் சொன்னது. "எங்கள் ப்ளாக்" கூட பல மாதங்களுக்கு முன்/சென்ற வருடம் என்ற நினைவு இவரைப் பற்றிப்/நிசப்தம் பற்றி பாசிட்டிவ் செய்திகளில் சொல்லியிருந்தார்கள்.

    இங்கு பதிந்து பெருமைப் படுத்தியமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துகள் தங்களுக்கும் மணிகண்டனுக்கும். மணிகண்டனுக்குப் பாராட்டுகளும் எங்கள் சிரம்தாழ்ந்த வணக்கங்களும். நிசப்தம் அறக்கட்டளை நிசப்தமாகப் பல பணிகளைச் செய்துவருகின்றது.

    ReplyDelete
    Replies
    1. யக்கோவ் 'வேலூரிலிருந்து நல்ல உள்ளம்'? ம்னு அவர் சொல்லுறதுக்கு முன்னாடியே நாங்க பேசிட்டோம். அதுனால நான் அவர் கேட்ட (நல்ல உள்ளம்) ஆளு கிடையாது. மேலும் பேருலதான் அன்பு இருக்கே தவிர பல நேரத்துல எனக்கு இருக்குற கோவத்த கண்டு எனக்கே சில நேரம் 'கோவன்' கோவமா வருது.

      Delete
  4. எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் தொகை வந்துகொண்டிருப்பதையும், அதற்கு நிவாரணப் பொருள்களை வாங்கியது பற்றியும், தனித்தனியாகப் பிரித்து சிறுசிறு பாக்கெட்டுகளாகக் கட்டப்பட்டதையும், பின்னர் வாகனங்களில் ஏற்றிச் சென்றதையும் விநியோகித்ததையும் தவறாமல் தினமும் பதிவுசெய்து கொண்டே வந்தார்... அருமையான திட்டமிட்ட நேர்மையான பணி. புதியதலைமுறையின் சிறந்த தமிழர் விருதுக்குத் தகுதியானவர். அந்த விருது அறிவிப்பு வரும்போது மறக்காமல் பரிந்துரைக்க வேண்டும். தகுதியான ஒருவரைப் பாராட்டிய உங்கள் செயலும் பாராட்டுக்குரியது. நன்றி

    ReplyDelete
  5. நண்பரிடம் நானும் பேசினேன். மிகவும் சாந்தமானாவர். நல்லவரை அறிமுக படுத்தியதற்கு நன்றி. என் சுவற்றில் பகிர்ந்தாச்சு

    ReplyDelete
  6. நல்ல உள்ளம் படைத்தவரை வாழ்த்துவோம் பாராட்டுவோம்

    ReplyDelete
  7. நல்ல மனிதர். ஏற்கனவே அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். தங்கள் மூலம் இன்னும் அறிந்தேன்.

    ReplyDelete
  8. இவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். எங்கள் பாஸிட்டிவ் பகுதியிலும் வெளியிட்டிருக்கிறோம்.

    ReplyDelete
  9. சந்தோஷமாக இருக்கிறது. அறக்கட்டளையின் செயல்பாடுகளில் நிறையப் பேர் உதவுகிறார்கள். எல்லோரையும் ஒருங்கிணைக்கும் கருவியாகச் செயல்படுகிறேன். என்னைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளும் கடவுளுக்கு நன்றி. வாழ்த்திய பாராட்டிய மனிதர்களுக்கு என்னுடைய பிரியங்கள்!

    ReplyDelete
  10. நன்றி தமிழா...
    விவேகானந்தர் 100 இளைஞர்களை கேட்டார்
    நம்மிடம் இதோ ஒரு 'விவேகி' தென்பட்டுள்ளார்.
    இவரால் ஆயிரமாயிரம் விவேகானந்தர் கேட்ட இளைஞர்களை
    உருவாக்க முடியும்..

    வெள்ளம் பல செல்வங்களையும் மணித உயிர்களையும் அள்ளிச்சென்றதோடு பல
    கள்வர்களையும் குள்ளநரிகளையும் அடையாளம் காட்டிவிட்டது.. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம்தான்.

    ஆனால் இந்த வேதனையிலும் நமக்கு ஆறுதலாய் தென்படுவது திரு மணிகண்டன் போன்ற சில நம்பிக்கை கீற்றுகள்தான்.. அதன் தொடர்சியாக இத்தனை நல்லுள்ளங்கள் இணைந்துள்ளன. அதற்காக இயற்கைக்கு நன்றி.

    மதுரைத்தமிழனுக்கு ஒரு வேண்டுதல்,
    சில நாட்கள் வேறு பதிவிடாமல் இப்பதிவை மற்ற அன்பர்கள் பார்வைக்கு வைத்திருக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  11. வா மணிகண்டன் பிரபல பதிவர். தொடர்ந்து எழுதி வருபவர். ஏராளமான வாசகரைக் கொண்டவர். தனது பிரபலத்தை மிக நல்ல முறையில் பயன்படுத்தி சேவை புரிந்து கொண்டிருக்கிறார். அவரது நிவாரண் உதவியும் திட்டமிடலும்,ஒளிவு மறைவற்ற கணக்கு விவரங்களும் அவர் அசாத்ரணமானவ்ர் என்பதை உணர்த்துகிறது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.