Monday, March 17, 2014


தமிழக மக்களே ஒரு முறையாவது இப்படிபட்ட வேட்பாளர்களுக்கு வாய்ப்புக்கள் கொடுத்துதான் பாருங்களேன்


கோவணமே கட்டாத ஊரில் ஒருத்தர் கோமணத்தை கட்டிச் செல்வதை போல இருக்கிறது இந்த அப்பாவி தமிழக வேட்பாளர். இந்த அப்பாவி வேட்பாளர் மற்றவர்களைப் போல அல்லாமல் நான் சொன்னதை செய்வேன் என்பதை எழுதி தந்து தன் தொகுதி மக்களிடம் ஒப்பந்தமே போடுகிறார். அது வேறு யாருமல்ல முனைவர் சுப. உதயகுமார் தான்


சரி இவர் இப்படி என்றால் தொகுதி மக்கள் எப்படி என்று கொஞ்சம் பார்ப்போமா?


மக்களோ எப்போதும் தன் தொகுதிக்கு எந்த வகையிலும் உதவாத சம்பந்தமில்லாத ஆட்களை அவர்கள் தான் விரும்பும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்காகவும், கிடைக்கும் இலவசங்களுக்காகவும் அல்லது தனது ஜாதி மதம் சார்ந்தவர் என்பதற்காகவும் தேர்ந்தெடுத்துவிட்டு அதன் பின் இந்த அரசியல் வாதிகளே இப்படிதான் ஜெயித்தற்கு பின் தொகுதி பக்கம் எட்டிப்பார்க்க மாட்டார்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று குறையை மட்டும் காலம் காலமாக முட்டாள்தனமாக கூறிக் கொண்டிருப்பார்கள்

இந்த மக்கள் முட்டாள் இல்லையென்றால் இந்த அப்பாவி வேட்பாளர் ஜெயிப்பார் அல்லது இந்த மக்கள் தாங்கள் முட்டாள்தான் என்பதை நிருபிப்பார்கள்

 மக்களுக்காக மக்களுடன் களத்தில் இறங்கி போராடியவர் மக்கள் சேவை செய்ய வருகிறார் அவரை ஜெயிக்க வைப்பார்களா தமிழக மக்கள் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்



தமிழக மக்களே ஒரு முறையாவது இவர்களைப் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்துதான் பாருங்களேன். இவர் வெற்றி பெற்றால் நிச்சயம் தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார் அல்லது உயிரையும் கொடுப்பார்.

இவர் மக்களோட போட்ட ஒப்பந்தம் கிழே உங்களுக்ககாக தரப்பட்டு இருக்கிறது



ஆம் ஆத்மி கட்சியின் (எளிய மக்கள் கட்சி) வேட்பாளராகப் போட்டியிடும் முனைவர் சுப. உதயகுமார் / மை. பா. ஜேசுராஜ் ஆகிய நான் ------ தொகுதி வாக்காளர்களுடன் கீழ்க்கண்ட அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறேன். இந்த ஒப்பந்தத்தை நான் முழுமையாக நிறவேற்ற உறுதி பூணுகிறேன்.


பொன்னாடை வேண்டாம்

மேடைகளிலோ, சுற்றுப் பயணங்களின்போதோ மாலைகள், மலர்க் கிரீடங்கள், பொன்னாடைகள், வெள்ளிச் செங்கோல்கள் போன்றவற்றை ஏற்கமாட்டேன். ஆனால் குழந்தைகளுக்கான புத்தகங்களை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டு அருகேயுள்ள அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அவற்றைப் பரிசாக வழங்குவேன்.


பணத்தை கொள்ளையடிக்க மாட்டேன்

பிரச்சாரத்தின் போதும், அதன் பிறகும் கட்-அவுட்டுகள், பெரிய ஃபிளெக்ஸ் பானர்கள் வைக்க மாட்டேன்; குடியிருப்புப் பகுதிகளில் ஒலி மாசு ஏற்படுத்தி பொதுமக்களுக்குத் தொந்திரவு செய்யமாட்டேன். தேர்தலுக்கான குறைந்தபட்சச் செலவுகளை மட்டுமே செய்வேன்; பெரும் பணத்தை முதலீடு செய்து, பின்னர் கொள்ளையடிக்கும் வியாபாரமாக தேர்தல் அரசியலை பாவிக்கமாட்டேன்.


நாடாளுமன்ற கூட்டத்தில் நான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால், உரிய கவனத்துடனும், பொறுப்புணர்வுடனும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் கலந்து கொள்வேன். எனது வருகைத் தகவல்களையும், கலந்துகொள்ளவில்லை என்றால் அதற்கானக் காரணங்களையும் அறியத் தருவேன்.


அவை மாண்பை காப்பேன் நாடாளுமன்றம் சுமுகமாக, திறம்பட செயல்படுவதற்கு ஆவன செய்து, இந்திய மக்களின் வளங்களை வீணடிக்க மாட்டேன். அவையின் மாண்பினைக் காத்து, என்னுடைய நடவடிக்கைகளில் கண்ணியத்தைப் போற்றுவேன்.


முக்கியமான பிரச்சினைக்காகப் போராட நேர்ந்தால், என்னுடைய நடவடிக்கை கண்ணியமானதாக, சனநாயகப் பண்பு கொண்டதாக, தொந்திரவு செய்யாததாக, வன்முறையற்றதாக இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.

அதிகார பயன்பாடு என்னுடைய அதிகாரங்களையும், ஆற்றல்களையும் இந்தியாவின் எளிய மக்களுக்காக பயன்படுத்துவேன். இந்திய மற்றும் அந்நிய நாட்டுப் பன்னாட்டு நிறுவனங்களுக்காகவோ, வியாபார நிலையங்களுக்காகவோ, வேறு குழுக்களுக்காகவோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்படுத்த மாட்டேன்.


லஞ்சம் வாங்கமாட்டேன்

யாரிடமிருந்தும், எந்தக் காரணத்துக்காகவும், எந்த விதத்திலும் லஞ்சம் பெற மாட்டேன். நிச்சயமாக அவையில் கேள்வி கேட்பதற்காக, அல்லது யாருக்காகவும், எதற்காகவும் ஆதரவாக வாக்களிப்பதற்காக, அல்லது வாளாவிருப்பதற்காக லஞ்சம் வாங்க மாட்டேன். நாடும், நாடாளுமன்றமும் முக்கியமான முடிவுகள் எடுக்கும் வேளையில், உங்கள் கருத்துக்களையும், அறிவுரைகளையும் கேட்டுப் பெறுவேன்.

எம்.பி.வளர்ச்சி நிதி
எம்.பி.யின் தொகுதி வளர்ச்சி நிதியை மேலாண்மை செய்வதற்கு ஐந்து ஆண்களும், ஐந்து பெண்களும் கொண்ட குழு ஒன்றை அமைத்து செயல்பட்டு, அந்தப் பணத்தில் யாரும் ஊழல் செய்யாமல் தடுப்பேன். நிறைவேற்றப்படும் திட்டங்களில் எனது பெயரைப் பொறிக்க மாட்டேன். தொகுதி ஒருங்கிணைப்புக்குழு மக்கள் பிரதிநிதிகளையும், உயர் அதிகாரிகளையும் கொண்ட "தொகுதி ஒருங்கிணைப்புக் குழு" ஒன்றை உருவாக்கி அதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், மேயர்கள், நகரத் தந்தையர் (தாய்மார்), பஞ்சாயத்துத் தலைவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட நீதிபதி, மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சித் தலைவர்கள், வட்டாட்சித் தலைவர்கள், நகர்மன்ற, பஞ்சாயத்து ஆணையர்கள் போன்றோரை சேர்த்துக்கொண்டு தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களை, மக்கள் தேவைகளை ஒருங்கிணைப்பேன்.


எம்.பி. ஒருங்கிணைக்கும் இந்தக் குழுவை மாதம் ஒரு முறையாவதுக் கூட்டுவேன். தொகுதி பிரச்சினைக்கு இதழ் தொகுதிச் செய்திகள் எனும் பெயரில் தமிழ் மாத இதழ் ஒன்றை வெளியிட்டு, பல்வேறு மசோதாக்கள், அவை விவாதங்கள், தொகுதிப் பிரச்சினைகள், அவற்றுக்கானத் தீர்வுகள் போன்றவற்றை வெளியிடுவேன்.


கொள்கை முடிவுகள் எடுக்கும்போது, வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கும்போது, "தொகுதிச் செய்திகள்" இதழிலும், பிற பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதி, உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை, விமரிசனங்களை பெற்றுக் கொள்வேன். மாதம் ஒருமுறை சந்திப்பு தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து, அவர்கள் குறைகளைக் கேட்டு, அவற்றைக் களைய முக்கியமான நகரங்களிலும், கிராமங்களிலும் "அக்கம்பக்கக் கூட்டங்கள்" நடத்துவேன்.


மாதம் ஒருமுறை பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்கள் கேள்விகளுக்கு உண்மையாக பதில் சொல்வேன். மக்களுக்கு சேவகன் [i] எம்.பி. பதவிக்கு மரியாதையும், பெருமையும் சேர்ப்பேன், [ii] எம்.பி.க்கும் மக்களுக்குமிடையே நம்பிக்கையை வளர்ப்பேன், [iii] துடிப்புடன் சமூகக் கடமையாற்றுவேன், [iv] உள்ளூர் ஈடுபாடுகளைப் போற்றும் குழுக்களுக்கு ஆதரவளிப்பேன், [v] கட்சியின் கொள்கைகள், திட்டங்கள், செயல்பாடுகளை மக்களிடம் தெரிவிக்கும் சேவகனாகப் பணிபுரிவேன். ஆண்டு தோறும் சொத்துக்கணக்கு எனது எம்.பி. பதவி முடியும் வரை, ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் எனது சொத்துக் கணக்கையும், வருமான வரிக் கணக்கையும் தொகுதி மக்களுக்குத் தெரிவிப்பேன்.


திரும்ப அழைக்கலாம் எனது தொகுதி மக்களின் அதிருப்திக்கு ஆளாகி, அங்கீகாரத்தை இழந்தால், அல்லது இந்த ஒப்பந்தத்தை மீறினால், என்னை மக்கள் திருப்பி அழைப்பதற்கு அணியமாக இருப்பேன். நிழல் எம்.பி தேர்தலில் நான் வெற்றி பெறவில்லையென்றாலும், தொகுதியை விட்டு விலகிச் செல்லாமல், தொகுதியில் ஓர் அலுவலகம் அமைத்து "நிழல் எம்.பி."யாக செயல்பட்டு வெற்றி பெற்றவரை மக்கள் தொண்டாற்ற ஊக்கப்படுத்துவேன். "நிழல் எம்.பி."யாக அனைத்து வழிகளிலும் மக்களுக்காக உழைத்து அடுத்த தேர்தலுக்குத் தயாராவேன்.


எளிய மக்களுக்கு உரிமை என்னுடைய அனைத்து செயல்பாடுகளிலும், சாதி, மத, குழும உணர்வுகளுக்கு இடங்கொடுக்க மாட்டேன்.


தொகுதியின் அனைத்து மக்களுக்குமான எம்.பி.ஆக செயல்பட்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் பணியாற்றுவேன். நான் எப்போதுமே பூவுலகின் நண்பனாகவும், இயற்கை அன்னையின் மகனாகவுமிருந்து, இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், எளிய மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமைகளைப் போற்றவும் என்னாலான அனைத்தையும் செய்வேன்.


பெண்களுக்கு மரியாதை நான் எப்போதுமே பெண்களை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்துவேன்; தினசரி வாழ்க்கையில் அவர்களின் பாதுகாப்பையும், சமத்துவத்தையும் அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பேன்.


[20] நமது குழந்தைகளின் மற்றும் இளைஞர்களின் ஈடுபாடுகளை மேம்படுத்தி, அவர்களின் பத்திரமான, பாதுகாப்பான வருங்காலத்துக்காக உழைப்பேன்.

ஒப்பந்தம் பத்திரம் தயவு செய்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இதன் அடிப்படையில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். நாம் ஒன்றாக செயல்பட்டு ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவோம்.



சுப. உதயகுமார்
முகவரி மேலும் நடவடிக்கைகளுக்கு,

தொடர் செயல்பாடுகளுக்கு என்னைத் தொடர்பு கொள்ள:

42/27 இசங்கன்விளை மணி வீதி,

பறக்கை ரோடு சந்திப்பு,

கோட்டார்,

நாகர்கோவில் 629 002,

கன்னியாகுமரி மாவட்டம்;


Email: spudayakumar@gmail.com;
skype: spudayakumar;
facebook: spudayakumaran;
Twitter: spudayakumar.


ஜேசுராஜ்



முகவரி
மேலும் நடவடிக்கைகளுக்கு, தொடர் செயல்பாடுகளுக்கு என்னைத் தொடர்பு கொள்ள:

மை. பா. ஜேசுராஜ்,

47 வடக்குத் தெரு,

செட்டிக்குளம்,

ஆழ்வார்குறிச்சி 627 412,

நெல்லை மாவட்டம்.

Email: mypaje2000@yahoo.co.in.


நடக்கப்போகின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர்களால் இப்படி வெளிப்படையாக அறிவிக்க தகுதி இருக்கும் என்று நம்புகின்றீர்கள்?


அன்புடன்
மதுரைத்தமிழன்

31 comments:

  1. நல்ல வேண்டுகோள். செவி சாய்ப்பார்களா மக்கள்.....

    பார்க்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. நல்லது நடக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தால் செவி சாய்த்துதான் ஆக வேண்டும்...அதில் மாற்று கருத்தே இல்லை

      Delete
  2. வித்தியாசமாக களம் இறங்கியுள்ளார்! ஜெயித்தால் நல்லதுதான்!

    ReplyDelete
    Replies
    1. உங்களை மாதிரி இளைஞர்களின் மனதில் ஜெயித்தால் நல்லது என்ற வார்தையே வரக்கூடாது அதற்கு பதிலாக அவர் ஜெயித்து வருவார் அதற்காக நான் என் முயற்சியை செய்வேன் என்று வர வேண்டும்

      Delete
  3. நல்ல ஓட்டுக்கள் மட்டும் அவருக்கு விழும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதுமட்டும் போதாதுங்க நாட்டுல கெட்டவங்க அதிகமுங்க அவர்கள் கொஞ்சம் சிந்தித்தால் நல்லது நடக்கும்

      Delete
  4. // எனக்கு ஒரு சந்தேகம்.... நீங்கள் எப்போதும் எழுதும் பதிவு போல இதுவும் ஓர் உட்டாலக்கடி பதிவு தானா...????

    சும்மா ஒரு பேச்சுக்கு தான் கேட்டேன் .... ஹீ..ஹீ.....


    நல்ல பதிவுதான்..நீங்கள் சொல்வதை பார்த்தால், உதய குமார் நல்லவர் போல தான் தெரிகிறது... கேஜ்ரிவால் போல ஆட்சிக்கு வந்ததும் , தர்ணாவில் ஈடுபட்டுவிட்டு , பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தால் தேவலை.... மக்களுக்கு நல்லதொரு பாராளுமன்ற பிரதிநிதி கிடைத்தால் சரி..

    ReplyDelete
    Replies
    1. என் தளத்தில் பதிவுகள் காலம்(சீதோஷ்ண நிலை ) மாறுவது போல அதுவும் மாறிக் கொண்டுதான் இருக்கும் அதனால பயப்படமா வாங்க

      Delete
  5. இந்த தேர்தல் பல வகைகளில் முக்கியத்துவம் பெற்றது. நான் ஆவலுடன் சில விசயங்களுக்காக காத்திருக்கின்றேன். பார்க்கலாம்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. என்னைப் பொறுத்தவரை சுவராஸ்யமான கதையைப் படிப்பது போலத்தான் தேர்தல் செய்திகளும் முடிவுகளும்

      Delete
  6. பணத்துக்கே பழக்கப்பட்ட வாக்குப் போடுவோர், (வாக்குப் போடாத பலர் தமிழகத்தில் உள்ளனர்), இவருக்குப் போடுவார்களா?
    மாறுபட்ட சிந்தனையுடைய இவரும் வெல்வது, மக்களுக்கு நன்று! இளைஞர்கள் மனம் வைத்தால் இவரை அனுப்பலாம்.

    ReplyDelete
    Replies
    1. மனம் வைத்தால் அந்த தொகுதி மக்களின் நலனுக்காக பாடு பட ஒருத்தர் கிடைப்பார் இல்லெயென்றால் தேர்தலுக்கு அப்புறம் மக்கள்தான் கடுமையாக பாடுபட வேண்டி இருக்கும் அடுத்த 5 வருடங்களுக்கு. கடவுள் ஒரு தடவைதான் அதிர்ஷ்டத்தை தன் கண்முன் காட்டுவார் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் பார்ப்போம் கடவுள் தந்த அதிர்ஷ்டத்தை இவர்கள் பயன் படுத்தி கொள்கிறார்களா என்று

      Delete
  7. மிக மிக வித்தியாசமான தேர்தல் வேபாளர்! அதுவும் எங்கள் ஊரிலிருந்து !!! மக்களின் செவியில் இவரது இந்த தேர்தல் அறிக்கை மக்களின் மூளையை எட்டுமா? எட்டவேண்டும் என்பதே எமது விருப்பம்! எங்கள் ஓட்டுக்கள் இங்காகிவிட்டது! ஆனாலும் நம்ம மக்கள் இன்னும் நாகர்கோவிலில் தானே! சொல்ல ஆரம்பித்துவிட்டோம்! ஏதோ எங்களால் இயன்றது!

    சூப்பர் மதுரைத்தமிழன்! நல்லதொரு அறிவிப்பு!! அதற்காகவே உங்களுக்கு ஒரு ஓட்டு!

    ReplyDelete
    Replies
    1. நிறை பேர்களிடம் எடுத்து சொல்லுங்கள் நல்ல மாற்றம் விளைய நீங்களும் ஒரு காரணமாக இருங்கள்

      Delete
  8. ஐயோ என்ன இது மதுரைத் தமிழா? இத்தனை நெகட்டிவ் ஓட்டுகள்?

    ReplyDelete
    Replies
    1. எனது தளத்தில் வரும் அரசியல் பதிவுகள் பலரால் பார்க்கப்படுகின்றது காரணம் மனதில்பட்டது எதையும் மறைக்காமல் பட்டென்று போட்டு உடைப்பதாலும் எதையும் யாரையும் எதிர்பார்த்து எழுதவில்லையென்பதாலும்தான்

      இப்போது அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் இணையதளங்களில் அரசியல் ஆட்கள் புகுந்து தங்களுக்கு எதிராக அல்லது தங்களை பாதிக்கும் செய்திகள் வந்தால் அதை குழுவாக வந்து எதிர்ப்பதும் இப்படி ஒட்டு போடுவதுமாகதான் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு தெரியவில்லை எனது தளத்திற்கு ஆட்கள் அதிகம் வருவது கூகுல் மூலம் என்பதுதான்...

      Delete
    2. இத்தனை எதிர்கள் இருந்தால் ஒருவர் வென்றுவிட்டதாக அல்லவா அர்த்தம் .
      வாழ்த்துக்கள் சகோ!

      Delete
  9. அண்ணாவின் பேச்சில் மயங்கி காமராஜரையே தோற்கடித்தவர்கள் அல்லவா நாம்!
    பார்ப்போம் என்ன நடக்குத்துன்னு!

    ReplyDelete
    Replies
    1. இப்ப என்ன நடக்கப்போகுது தெரியுமா டாஸ்மாக் மயக்கத்தில் இவரை தோற்கடிப்பார்கள் அதுதான் நடக்கப் போகிறது

      Delete
  10. டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தியை மதுரை மத்திய தொகுதியில் தோற்கடித்தவர்கள் நாம்!
    அப்படி இருக்கும்போது இவரையெல்லாம் ஜெயிக்க விட்டுவிடுவோமா?
    அதுபோக கெஜ்ரிவாலே, ஜெயித்த பின்பு கண்ணியமான நடவடிக்கையோ, ஜனநாயக பண்புகளை காப்பதற்கோ அல்லது பொதுமக்களுக்கு தொந்திரவு செய்தும் கிடைத்த பதவியை உதறிவிட்டு (தப்பித்துவிட்டு?) வன்முறைகளை கையிலெடுத்துக்கொண்டிருக்கிறார். அவரது கட்சியில் சேர்ந்த இவர் என்ன செய்யப்போகிறாரோ?

    ReplyDelete
    Replies
    1. கட்சியை ஆரம்பித்து போட்டியிடுவது என்பது அவ்வளவு எளிதல்ல அதானல்தான் இவர் அந்த கட்சியில் சேர்ந்து போட்டி இடுகிறார்.. இவர் வந்து என்ன மாற்றம் கொண்டு வந்துவிடுவார் என்று சிந்திப்பதற்கு பதில் மற்றவர்கள் (ஏற்கனவே வந்தவர்கள்) வந்தால் என்ன செய்துவிடப் போகிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். இவராவது மாற்றம் கொண்டு வர முயற்சிக்கலாம் ஆனால் மற்றவர்கள் வந்தால் சிறிதளவு கூட மாற்றம் ஏற்படாது.

      உதயமூர்த்தி பேச்சிலும் கட்டுரைகளில்மட்டும்தான் போராடினார் கொண்டுவந்தார் ஆனால் இவர் களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார் என்பது யாரும் அறிந்ததே அதனால் இவரால் மேலும் போராட முடியும் என்பது என் கருத்து

      Delete
    2. காந்தி இருக்கையிலேயே காங்கிரசை கலைத்திருக்கலாம் என்று வருந்தியதாக படித்ததுண்டு. அந்த சூழலில்தான் கக்கனும், காமராஜரும் ஆட்சி செய்தார்கள். இவர் போன்ற களப்போராளிகளை
      மக்களே கண்டிப்பாக நம்பலாம் என்பது என் கருத்து.

      Delete
  11. //மக்களோ எப்போதும் தன் தொகுதிக்கு எந்த வகையிலும் உதவாத சம்பந்தமில்லாத ஆட்களை அவர்கள் தான் விரும்பும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்காகவும், கிடைக்கும் இலவசங்களுக்காகவும் அல்லது தனது ஜாதி மதம் சார்ந்தவர் என்பதற்காகவும் தேர்ந்தெடுத்துவிட்டு//
    இப்படிப் பட்டவர்கள்... அரசியல் வியாதிகளை விட அசிங்கமானவர்கள்... தங்களுக்குச் சாதகமாக இருக்கும்/இருக்கப்போகும் பட்சத்தில்... எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும்... திருடனில் நல்ல திருடனுக்கு ஓட்டு என்று சொல்வதோடல்லாமல்... ஓட்டு என்பது நமது உரிமை... அதைக் கண்ண்டிப்பாக உபயோகிக்க வேண்டும் என்று அடுத்தவர்களையும் உசுப்பேத்திக் கொண்டிருப்பார்கள்... முதலில் இந்தக் குழு மனப்பான்மை மறைய வேண்டும்...

    ReplyDelete
  12. நல்லதே நடக்கட்டும் .நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பதே நாட்டு
    மக்களின் கடமை .திருவாளர் .முனைவர் .சு. ப. உதயகுமார் அவர்கள்
    வெற்றி பெற வாழ்த்தி நிற்போம் .எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும்
    துணிச்சலாகப் பதிவிடும் மதுரைத் தமிழனுக்கு என் மனமார்ந்த
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .த.ம .9

    ReplyDelete
  13. தன் நலமே பெரிதென்று நினைத்து தன் கஜானாவை ரொப்பிக்கொள்ளும் மனிதர்கள் நடுவில் இந்த மனிதர் மக்களுக்காக சேவை செய்ய இப்படி ஒரு வாய்ப்பை எடுத்துக்கொண்டு களம் இறங்கும்போது நம்மால் முடிந்தது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதே. கண்டிப்பாக ஜெயிப்பார்... மக்கள் நலன் கருதி சேவை செய்ய வருவோருக்கு மக்கள் நல்லது செய்யட்டும்.... த.ம.10

    ReplyDelete
  14. இவர் சுயேட்சையாக நின்றிருந்தால் ஆதரவு தரலாம். ஆனால் அந்த கெஜ்ஜரிவால் பின்னால் செல்வதால் சந்தேகம் வருகின்றது. இத்தாலி சோனியா கும்பலின் கைத்தடியே இந்த கெஜ்ஜரிவால் . பிஜெபி செல்வாக்காக உள்ள இடங்களுக்கு மட்டுமே சென்று காமடி செய்கின்றார். தகராறு செய்கின்றார்... அந்த கெஜ்ஜரிவால் ஒரு காமடி பீஸ்... அந்த வாலுக்குப் பின்னால் வாலாக நிற்கும் உதயகுமார் யாருடைய வால்?

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை......

      Delete
  15. Visit : http://www.seenuguru.com/2014/03/tamil-blogging-day-1.html

    ReplyDelete
  16. taking such a long tym 4 next one!? what happened brother? are you alright?

    ReplyDelete
  17. வணக்கம் சகோதரா சேமம் எப்படி ?..நீண்ட நாள் காணவில்லை பிற தளங்களில்
    தங்களின் வருகையைக் கண்டேன் மிக்க மகிழ்ச்சி .சிறப்பான ஆக்கங்கள் மேலும்
    தொடர என் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  18. நேர்மை ஒருபக்கம் இருந்தாலும் இவர் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் நமது நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும். முதலாளிகளும் (இந்திய, பன்னாட்டு, கார்ப்பரேட்) ஏழைகளும் இல்லாத நாடு எப்படிச் சாத்தியமாகும்.

    கோபாலன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.