Tuesday, December 11, 2012



கோயிலுக்கு சென்ற .திமுக கட்சியின் பொதுச்செயலாளர் திரு .அன்பழகன்



தலைப்பு நாலு பேரை கவர மட்டுமே. திரு.அன்பழகன் அவர்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல

புதுக்கோட்டையில் 'ஞானாலயாஎன்னும் பெயரில் பா.கிருஷ்ணமுர்த்தி அவர்கள் தனது சொந்த முயற்சியில் 85,000 க்கும் மேற்பட்ட அளவில் நூல்கள், சஞ்சிகைகள், மலர்கள் தொகுப்புகள் என ஒர் (ஞானம் + ஆலயம் = ஞானாலயா  ) அறிவுக்கோயிலை லாப நோக்கின்றி  கட்டி வைத்திருக்கிறார். இது இவரது முயற்சியால் மட்டும் வளர்ந்தது அல்ல. இதற்கு பின் ஒரு பெண்ணின் முயற்சியும் உண்டு அது வேறுயாருமல்ல அவரது துணைவியார் திருமதி.டோரதி கிருஷ்ண மூர்த்திதான். ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண்மணி இருப்பார் என்பதற்கு உதாரணமாக திருமதி.டோரதி கிருஷ்ண மூர்த்தி விளங்குகிறார்.


இது வெறும் நூலகம் மட்டுமல்ல, நமது சமுகத்தின் பண்பாடு, கலாசாரம் மற்றும் வாழ்வியல் பற்றிய ஆவண காப்பகமும் ஆகும்.இந்த ஞானாலயா இந்த ஒட்டு மொத்த தமிழ் சமுதாயதினருக்கே உரித்தானது, இது உலகமெங்கும் உள்ள தமிழ் சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் என்பதே இந்த கிருஷண மூர்த்தி தம்பதியாரின் எண்ணம்.


ஞானாலயாவில் அனைத்து நூலகளும் அழகாக பராமரிக்கப்பட்டு எவர் வேண்டுமானாலும் வந்து பயன்படுத்தும் அளவிற்கு தன் சொந்த காசில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பாதுகாத்து வருகின்றார் .இதற்காக தனியாக ஒரு வீடு கட்டி அதை நூலகமாக மாற்றி வைத்துள்ளார்.  இது போக தான் இருக்கும் வீட்டின் மாடிப்பகுதியைக்கூட நூலகமாக மாற்றி உள்ளார்.  பலரும் பாதுகாக்க முடியாத புத்தகங்களை இவரிடம் கொடுத்த காரணத்தினால் இடப்பற்றாக்குறையின் காரணமாக இப்போது நூலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டின் மாடியில் தேவைப்படும் அளவிற்கு புதிதாக கட்டிடம் கட்டிக் கொண்டு இருக்கிறார்.


கிருஷ்ணமூர்த்தி ஏறக்குறைய 70 வயதை தாண்டி போதிலும் இன்னமும் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார்.  இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர்.  இவரது  மனைவியும் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்.  இருவரின் ஓய்வு பெற்ற நிதியில் இருந்தும், தாங்கள் சம்பாரித்த சம்பாத்தியத்திலும் இருந்து தான் இந்த பொக்கிஷத்தை பாதுகாத்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் இவரின்  இரு மகள்களும் அப்பாவுக்கு தேவைப்படும் நிதியை தங்களால் முடிந்தவரைக்கும் கொடுத்து இந்த நூலகத்தை பாதுகாப்பதிலும், புதிய கட்டிட கட்டுமானத்திலும் உதவுகிறார்கள்.

 
இந்த பதிவை படிப்பவர்கள் முடிந்தால் மூன்று விதங்களில் உங்களால்  இந்த ஞானாலயாவிற்கு உதவி செய்ய முடியும்.

திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் அலைபேசி வாயிலாக உரையாட முடியும்.  அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் தனது வயதின் காரணமாக இந்த நூலகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசிய அவசர தேவையின் பொருட்டு நிதி உதவியை எதிர்பார்க்கின்றார்.  இதுவரைக்கும் எவரிடமும் எதுவும் கேட்காமல் தன் அளவில் முடிந்தவரை செய்துள்ளார். அவருடன் உரையாடும் போது மேலும் விபரங்கள் கிடைக்கும்.  அவருக்கும் ஒரு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். ஒருவரின் அயராத சேவைகளை அழைத்து பாராட்டும் போது அதன் வலிமை பல மடங்கு அதிகமாக இருக்கும்.

முக்கிய புத்தகங்களை மென்பொருளாக மாற்ற தெரிந்த நண்பர்களிடம் (தமிழிலில் ஓசிஆர் மென்பொருள் இல்லை.  இதை கண்டுபிடிக்க இதுவரையிலும் தமிழ்நாட்டு அரசாங்கம் எந்த முயற்சியையும் எடுக்க வில்லை என்பது வருத்தமான செய்தி) சொல்லி ஓசிஆர் மென்பொருள் குறித்து இனம் கண்டு கொள்ள முடிந்தால் இந்த நூலகத்திற்கு உதவியாக இருக்கும்.

இப்படி ஒரு நூலகம் புதுக்கோட்டையில் இருக்கிறது என்பதை பரவலாக்கம் செய்யும் போது அங்கங்கே இருக்கும் மாணவர்களுக்கும், நூலக ஆர்வலர்களுக்கும் உதவியாக இருக்கும்.  இன்னும் பாதிப்பேர்களுக்கு இப்படி ஒரு நூலகம் இருக்கிறது என்பதே தெரியவில்லை.

http://www.youtube.com/watch?v=ABG7LpwUCRM



GNANALAYA LIBRARY-KALAIGNAR TV


Tamil Heritage Lecture: Gnanalaya Krishnamurthy on AK Chettiar, 7th August 2010  ( By : Badri Seshadri )





www.gnanalaya-tamil.com


உங்கள் புரிதலை இந்த நூலகம் குறித்து நண்பர்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்க. இந்த நூலகம் அடுத்த தலைமுறைக்கும் பாதுகாப்பாக கொண்டு செல்வது நமது கடமையாக இருக்க வேண்டும்.  திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாட/ உதவிக்கரம் நீட்ட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

திரு. பா. கிருஷ்ணமூர்த்தி

ஞானாலயா நூலக நிறுவனர்
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140

வங்கி விவரம்:

Account Holder: Sri B. KRISHNAMOORTHY

S B Account Number: 1017047

Bank Name: UCO Bank

Branch: PUDUKKOTTAI

IFS CODE: UCBA0000112








அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்.

டிஸ்கி : இந்த தகவல் மிக கண்ணியமான வலைபதிவாளராக எல்லோராலும் மதிக்கபடும்  உயர்திரு : ஜோதிஜி திருப்பூர் அவர்கள் இந்த ஞானாலயாவிற்கு நேரில் சென்று பார்த்து எனக்கு தகவல் அனுப்பிய மெயிலை ஆதாரமாக கொண்டு வெளியிடப்படுகிறது. நல்ல தகவலை பகிர்ந்த அவருக்கு எனது நன்றிகள்..

நண்பர்களே முடிந்தால் இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு எடுத்து சொல்லவும் & முடிந்தவரை உதவவும்

4 comments:

  1. பதிவின் தலைப்பை பார்த்து விட்டு உள்ளே வருபவர்கள் உங்கள் கொல்லப் போகின்றார்கள். ஆனால் உங்களுடன் உரையாடிய விதத்தில் இந்த அளவுக்கு மிகத் தெளிவான விசயங்களை கோர்த்து எழுதுவீர்கள் என்று நான் எதிர்பார்க்க வில்லை. மிக்க நன்றி. என்னைவிட புதிதாக உருவாக்கிய வலைதளத்திற்கு உங்களின் வேகமான செயல்பாடுகளும் உழைப்பும் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

    உங்கள் அக்கறைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி.

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று கழக உடன்பிறப்புகள் தான் நமக்கு கற்றுத் தந்தார்கள். ஆனால் அவர்களையே வாரிவிட்டீங்களே?

    பேராசிரியர் என்னுடைய பார்வையில் மிக நல்ல மனிதர். அவரால் என்ன முடியுமோ அதை குறித்து மட்டும் தான் பேசுவார். அதில் மட்டும் தான் அக்கறை செலுத்துவார். கலைஞரை விட ஒரு வயது (என்று நினைக்கின்றேன்) அதிகமானவர். ஆனால் இன்று வரையிலும் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ்கின்றார்.

    அவர் எழுதிய எழுத்தும், பேச்சும் என்றுமே தமிழ் கூறும் நல்லுலகம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று. எப்படி நாவலர் நெடுஞ்செழியனை நாம் மற்ந்து போனோமோ? அதைப் போலவே இவரின் செயல்பாடுகளையும் விரைவில் நம் தமிழினம் மறந்து போய் விடும்.

    அப்போது யாராவது ஒரு நடிகையின் மகள் வளர்ந்து இருப்பார்.

    ReplyDelete
  2. தலைப்பு மேம்போக்காக விளையாட்டாகத் தெரிந்தாலும் உண்மை அதுதானே.. ஞானாலயா என்னும் அறிவுத் திருக்கோயில்க்கு சென்ற படங்கள் அருமை

    பகிர்வுக்கு நன்றி மதுரைத் தமிழன்

    ReplyDelete
  3. அறிவாலயம் என்று பெயர் வைத்தவர்கள், மஞ்சள் துண்டு போட்ட பகுத்தறிவு வாதிகள் ஞானாலயாவுக்கு தாராளமாகப் போகலாம். ஞானாலயா பற்றிய தகவலுக்கு நன்றி!!

    ReplyDelete
  4. பதிவின் தலைப்பை பார்த்ததும், என்னதுன்னு வந்தேன்! ஆனால் சந்தோஷமாக போகிறேன். ஞானாலயா எல்லோருக்கும் பயன்படும்படி அமைத்ததில் அவருக்கும் அவருடை துணைவியாருக்கும் வணக்கங்கள். நன்றி.
    அருமையான பதிவு நண்பரே!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.